September 2, 2015

இனக்கொலை குறித்து சர்வதேச விசாரணை! இலங்கை வட மாகாண சபைத் தீர்மானத்தை வரவேற்கிறோம்! தி. வேல்முருகன்!

தமிழீழ மக்களின் உள்ளக்கிடக்கையை மீண்டும் ஒரு முறை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது இலங்கையின் வட மாகாண சபை. இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற
இனக்கொலை,போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் குறித்து சர்வதேசப் புலனாய்வுதான் வேண்டும், எந்த வடிவிலும் உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் திரு சி.வி. விக்னேஸ்வரன் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேறச் செய்துள்ளார். இதற்காக அவரையும் வட மாகாண சபை உறுப்பினர்களையும் தமிழக மக்கள் சார்பில் மனமாரப் பாராட்டுகின்றோம்.
கடந்த 2012, 2013, 2014 ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்கா இப்போது புலனாய்வு முடிந்து அறிக்கை வெளிவரப்போகும் நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது. இது தமிழர்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் செயல் என்று உலகத் தமிழர்கள் எல்லாம் அதிர்ந்து போயிருக்கும் நேரத்தில் வட மாகான சபைத் தீர்மானம் எங்கள் நெஞ்சில் பால் வார்த்துள்ளது. தமிழ் மக்கள்ளல் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபையின் இந்தத் தீர்மானத்தை சர்வதேசம் மதித்து நடக்கும் என்று நம்புகிறோம்.
வட மாகாண சபைத் தீர்மானத்தையும் கடந்த காலத்தில்  தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக இயற்றிய தீர்மானங்களையும் கருத்தில் கொண்டு இந்திய அரசு சர்வதேசப் பொறிமுறைக்கு ஆதரவாகவும் அமெரிக்கத் தீர்மானத்துக்கு எதிராகவும் மனித உரிமை மன்றத்தில் நிலையெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
உள்நாட்டுப் பொறிமுறையோ , கலப்புப் பொறிமுறையோ நீதியை நிலைநாட்ட உதவாது என்று ஓங்கிக் குரல் எழுப்பி, ஈழத் தமிழர் இனக்கொலை குறித்து சர்வதேசப் பொறிமுறை, சர்வதேச நீதிமன்றம்,  அல்லது சர்வதேசத் தீர்ப்பாயம் என்ற கோரிக்கையை ஈழத் தமிழர்களோடு சேர்ந்து    தமிழகத்  தமிழர்களும் ஒன்றுபட்டு எழுப்பவும், அதற்காக ஒன்றுபட்டுப் போராடவும் அறைகூவி அழைக்கிறோம். 

பண்ருட்டி தி. வேல்முருகன்,
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

No comments:

Post a Comment