August 8, 2015

நீர்கொழும்பில் மஹிந்தவின் கூட்டத்துக்கு வீதிக்குக் குறுக்காக கட்டிய அலங்காரங்களை அகற்றிய பொலிஸார்!

நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக்
கூட்டத்திற்காக தேர்தல் சட்டவிதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான கட்டவுட்களையும் கொடிகளையும் பொலிஸார் அகற்றினர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக நீர்கொழும்பு – – கொழும்பு பிரதான வீதிக்கு குறுக்காக கட்சி அமைப்பாளர்களினால் அமைக்கப்பட்டிருந்த கொடிகளையும், பதாகைகளையுமே பொலிஸார் அகற்றினர்.
நீர்கொழும்பு –- கொழும்பு பிரதான வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான பெனர் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை, பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதி அமைச்சரும் வேட்பாளருமான சரத்குமார குணரத்ன இது தொடர்பாக தமது எதிர்ப்பை பொலிஸாரிடம் தெரிவித்ததை அவதானிக்க முடிந்தது.
கட்சியின் தலைவர் ஒருவர் தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்ள வரும்போதே வீதிக்கு குறுக்காக அலங்காரங்களை செய்ய முடியும் என்ற தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டதாக அறிய முடிந்தது.

No comments:

Post a Comment