June 4, 2015

பெண்கள் மீதான வன்முறை, கள்ளக்காதல், போதைப்பொருள்- வாழைச்சேனையில் பெரும் சமூக அவலம்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கணவன்மாரால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் மனைவிமார்களின் தொகை வெகுவாக அதிகரித்துக்கொண்டு வருவது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. வைத்தியசாலை தரவுகள்,
பொலிஸ்முறைப்பாடுகள் அடங்கலாக ஆதாரபூர்வ தரவுகளை அடிப்படையாக கொண்டு தன்னார்வ நிறுவனங்கள் சில நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குள் உள்ளடங்கும் கோறளைப்பற்று தெற்கு(கிரான்), கோறளைப்பற்று மத்தி(வாழைச்சேனை-முஸ்லிம்), கோறளைப்பற்று(வாழைச்சேனை -தமிழ்),கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) ஆகிய பிரதேச செயலகப்பிரிவிலேயே இச்சம்பவங்கள் நடந்தேறி வருவது கண்டறியப்பட்டுள்ளன.
பொதுவாக இப்பிரதேச செயலகப்பிரிவுகளில் அடங்கும் எல்லைக் கிராமங்களான காவத்தமுனை,பாலைக்காட்டுவெட்டை, ரிதிதென்ன, ஜெயந்தியாய,மாஞ்சோலை, செம்மணோடை, பிறைந்துரைச்சேனை,கல்குடா, புதுக்குடியிருப்பு, சுங்காங்கேணி, கருவாக்கேணி,வாகனேரி, மினுமினுத்தவெளி போன்ற பகுதிகளிலேயே இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுவருகின்றது.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டு வரும் முறைப்பாடுகள், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் பாதிப்புக்குள்ளான மனைவிமாரின் வாக்குமூலங்கள்,மத்தியஸ்த சபைக்கு வருகின்ற முறைப்பாடுகள், காழி நீதிமன்ற விசாரணைகள், ஆலய மற்றும் பள்ளிவாயல் தர்ம கர்தாக்களிடம் வந்து சேருகின்ற முறைப்பாடுகள்,நீதிமன்றங்களுக்கு வரும் விசாரணைகளை அடிப்படையாக வைத்து சில தன்னார்வ அமைப்புக்கள் இந்த தரவுகளை தொகுத்துள்ளன.
வறுமை, காணிப்பிரச்சினை, சொத்துப் பங்கீடுகளில் உள்ள பிரச்சினைகள், இரண்டாம் தார திருமண வாழ்க்கைகளினால் ஏற்படுகின்ற குழப்பங்கள்,கள்ளத் தொடர்புகள்,போதைப் பொருள் பாவனைகள் இவ்வாறு மனைவிமார் தாக்கப்பட்டு வருவதற்குறிய காரணங்களாக அறியப்பட்டு வருகின்றன.
அத்துடன் கன்னத்தில் அறையப்பட்டும், வயிற்றுப் பகுதிகளில் உதைக்கப்பட்டும், நகக் கீறல்கள்,தீக்காயங்கள் போன்ற பாதிப்புக்களை பெண்கள் சந்தித்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
பெண்களிற்கெதிரான வன்முறை தாக்குதலாகவும், துன்புறுத்தலாகவும் மாறும் தன்மை அதிகரித்து செல்வது அதிர்ச்சிளிப்பதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட ஒரு தன்னார்வ அமைப்பின் பெண் அதிகாரி தீபத்திடம் அதிர்ச்சி தெரிவித்தார்.
பாதிப்பிற்குள்ளாகும் பெண்களின் கணவன்மார் வேலையற்றவர்களாகவோ, மது மற்றும் போதைக்கு அடிமையானவர்களாகவோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பை பெணுபவர்களாகவோ உள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், கிராமப்புறங்களில் உள்ள ஆண்கள் மனைவியுடன் குறிப்பிட்ட காலம் வாழ்க்கை நடத்திவிட்டு, பின்னர் யுவதிகளுடன் கள்ள உறவை வைத்து கொள்வதாகவும், இதனால் பாரிய சிக்கல் தோன்றியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை தட்டிக் கேட்கும் சமயத்தில் மனைவி தாக்கப்படுகிறார், அல்லது மனைவியின் உறவினர்களால் யுவதி தாக்கப்படுகிறார். இரண்டிற்கும் மேலதிகமாக, கள்ளஉறவை பேணுபவர் திடீரென தொடர்பை துண்டிப்பதால் இந்த யுவதிகளும் வாழ்வை தொலைத்துவிட்டு, வேறுதிசைகளிற்கு பயணிக்கிறார் என கவலை தெரிவித்தார்.
இந்த விடயத்தில் அரசு மற்றும் சமூக நிறுவனங்கள் அவசரமாக கவனம் செலுத்த வெண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment