குஞ்சுக்குளம் தொங்குபாலம் சேதமடைந்துள்ள நிலையில், அதனூடாக ஆபத்தான பயணத்தை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மேற்கொண்டு வருகின்றனர்.
குஞ்சுக்குளம் கிராமத்துக்கான ஒரேயொரு பிரதான தரைவழிப்பாதையை 10
அடிக்கும் மேலாக வெள்ளம் நிரப்பி பாய்வதால், கிராம மக்கள் வேறுவழியின்றி சேதமடைந்துள்ள தொங்குபாலத்தை தமது போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
மல்பத்துஓயா ஆற்றுநீர் பெருக்கெடுத்து பாய்வதனால், நடைபெற்றுக் கொண்டிருந்த புதிய கொங்கிறீட் பாலத்தை அமைக்கும் கட்டுமானப்பணிகளும் தாமதமடைந்துள்ளன.
ஆற்றுநீர் பெருக்கெடுத்து பாயாத காலங்களில் குறைந்தளவான தொழிலாளர்களை கொண்டு மந்தகதியில் கட்டுமானப்பணிகள் இடம்பெறுவதாலேயே பாலம் அமைக்கும் பணிகள் நீண்டகாலமாக முடிவுறுத்தப்படாமல் இருப்பதாக மக்கள் குற்றம் தெரிவிக்கின்றனர்.
பாலத்தை அமைக்கும் பணியை பொறுப்பேற்றுள்ள ஒப்பந்ததாரர் ஆற்றுநீர் வற்றியிருக்கும் காலத்தில் ஆளணியினரை அதிகப்படுத்தி துரிதகதியில் கட்டுமானப்பணிகளை முடிவுறுத்த வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குஞ்சுக்குளம் கிராமமானது பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கிராமம் ஆகும். வருடாவருடம் மல்பத்துஓயா பெருக்கெடுப்பதனால் இக்கிராமத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உணவு, மருத்துவ வசதிகளின்றி இம்மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியிலும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உலங்குவானூர்திகள் மூலமாக இக்கிராம மக்களுக்கு உணவுகள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment