May 11, 2015

முதலமைச்சரே நீங்கள் ஆன்மீகவாதியா? யாழ்ப்பாணத்து கடாய் ஆட்டின் கேள்விகள் !

யாழ்ப்பாணத்தில் வேள்விகளுக்காக வெட்டிச் சாய்க்கப்படும் கடாய் ஆடுகளுக்காக வடக்கு மாகாண முதலமைச்சரைப் பார்த்து  கோபத்துடன் கேள்விக்கணைகளைத் தொடுக்கிறது ஒரு கடாய் ஆடு.
இதோ கேள்விகள்...


1) நெற்றியில திருநீறும் சந்தனமும் போட்டுக் கொண்டு சிவ பக்தன் வேடம் போட்டுத் திரியும் வடக்கு மாகாண முதலமைச்சரே நீங்கள் ஆன்மீகவாதியா? கோவிலுக்கு முன்னாள் வைத்து கொலை செய்து தலை அறுப்பதை பார்த்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறீரே?

2) பொட்டுப் போட்டுக் கொண்டு திரியுறவன் எல்லாம் பச்சைக் கள்ளன்கள் என்று சொல்கின்றார்களே!! அது உண்மையா? எங்களைப் பற்றி ஒருவார்த்தையாவது எங்காவது சொல்கின்றீரா?

3) போரில் பாதிக்கப்பட்டு அநாதரவாக நிற்பவர்களைப் பற்றி சிந்திக்காது, கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் பற்றிச் சிந்திக்காது பாலியல் குற்றவாளிகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பிரேமானந்தாவின் சீடர்களை வெளியே எடுக்க முற்பட்ட நீங்கள் எங்கள் இனத்தையும் காப்பாற்றலாம்தானே? ஏனெனில் நாங்களும் பல கற்பழிப்புக்களை நடாத்திவிட்டு இருக்கின்றோம். அது எங்கள் இனத்தைப் பெருக்குவதற்காக என்றாலும் பல பெண் ஆடுகளுடன் தொடர்பு எங்களுக்கும் இருக்கின்றது. நாங்களும் பிரேமானந்தா பக்தர்கள் போலத்தான் ஐயா!!

4) உங்களின் முதலமைச்சர் அலுவலகத்தில் இருக்கிற முக்கிய அதிகாரியும் எங்கள் இனத்தில்  உடலில் போட்ட பங்கு இறைச்சி வாங்கிச் சாப்பிட்டுள்ளார். அதையாவது ஒருக்கா கேட்டுப்பாரும்

5) பிரான்பற்று காளி அம்மன் கோவிலில் “லக்ஸ்பீக்கரில்“ கத்திக் கத்தி சொன்னாங்கள்  ”கைத்தொலைபேசியில் படம் பிடிப்பவர்கள் பொலிசாரால் கைது செய்யப்படுவார்கள். அவர்களது கைத்தொலைபேசி நீதிமன்றத்திலேயே ஒப்படைக்கப்படும். பல கைத்தொலைபேசிகள் பறிக்கப்படுகின்றன” என்று. சுற்றிவர தகரத்தால் மறைக்கப்பட்ட இடத்தினுள் வைத்து தலை அறுக்கின்ற பாவிகள் அதை தொலைபேசியில் எடுத்து ஊடகங்களுக்கு வழங்கக் கூடாது என்றும் கடுமையாக இருந்திருக்கிறார்கள்...... எங்களது விசயத்திலும் ஊடக அடக்குமுறை இடம்பெற்றிருக்கிறதா?

6) நீங்களும் முன்னாள் நீதியரசர். கோவிலுக்குள் இருந்து ஒருவன் கைத்தொலைபேசிகள் பயன்படுத்த தடை என்று சொல்லி நீதிமன்றத்தையும் அதற்குள் கொண்டு வந்து கதைக்கிறான். சட்டப்படி இப்படி எல்லாம் கதைக்கலாமோ?

7) எங்கள் இனத்துக்கு ஆதரவாக எடுக்கப்பட்டு சனத்திற்கு காட்டப்பட்டுள்ள வீடியோ இது. இதில் எத்தனை சிறுவர்கள் கொலை வெறியுடன் ஆட்டையும், கோழிகளையும் கொண்டு திரியுறாங்கள் என்டு பாருங்கள். அதுக்குள்ள ஒருத்தன் தகரத்தில் ஏறியும் பூராயம் பாக்குறான். அவனை ஒருத்தன் கீழே இழுத்தி விழுத்தி சண்டித்தனம் காட்டுறான். இது எல்லாம்  எங்களைக் கொல்வதால் வந்த விணைகள்தானே!!

முதலமைச்சரே வடக்கு மாகாணசபையைப் பொறுப்பெடுத்த நீங்கள் தனியே அங்கு வாழும் மனுசரை மட்டும் கவனத்தில் எடுக்கப்படாது. எங்களையும் கவனத்தில் எடுக்க வேணும். எங்களுக்காக உங்கட உறுப்பினர்கள் யாராவது பிரேரணை கொண்டு வந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்.

இல்லாவிடின் நீங்களும் பசுத்தோல் போர்த்த நரி என்பது உலகத்திற்கு தெரிந்துவிடும்.


No comments:

Post a Comment