May 10, 2015

தமிழ் மக்களுக்கு சுயாட்சி இருக்க வேண்டும்! மட்டக்களப்பில் சம்பந்தன் பேச்சு( படங்கள் இணைப்பு)

தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வை நாங்கள் வழங்க வேண்டும். அவர்கள் சம அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழ வேண்டும். சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி இருக்க வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு
என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதித் தவிசாளரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
பாலிப்போடி சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை தமிழசுக் கட்சி இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன, செங்கலடி மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் வ.கந்தசாமி உட்பட பல் கலந்துகொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாங்கள் ஒரு போதும் நாட்டினை பிரிக்கும்படி கேட்கவில்லை. இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சிமுறை வேண்டும் என்று கூட நாங்கள் கேட்கவில்லை. மலைநாட்டுப் பகுதியைச் சேர்ந்த கண்டிய தலைவர்கள் டொனமூர் இலங்கைக்கு விஜயம் செய்த போது 1933ல் அவருக்கு முன்னால் நின்று இந்த நாட்டிலே ஒரே மக்கள் வாழ வில்லை வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள் ஆகவே இந்த மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் ஒரு சமஷ்டி ஆட்சி இடம்பெற வேண்டும் என கேட்டார்கள்.
இந்த நாட்டிலே கண்டிய சிங்கள மக்கள், கீழ் நாட்டுச் சிங்கள மக்கள், வட கிழக்கிலே தமிழர்கள் என வெவ்வேறான மூன்று இனங்கள் வாழ்கின்றன. சமஷ்டியின் அடிப்படையில் மூன்று இனங்களுக்கும் தாங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் போதிய அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என கேட்டார்கள்.
1972ஆம் ஆண்டு அரசியல்சாசனம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது ஒரு சமஷ்டி அடிப்டையிலான தீர்வு கிடைக்க வேண்டும் என தந்தை செல்வா, அண்ணன் அமிர்தலிங்கம் ஊடாக கேட்டார். கனிசமான அளவு அதிகாரப் பகிர்வுடன் ஒரு தீர்வ கிடைக்க வேண்டும் என ஒரு தீர்வுத் முன் வைத்தார்கள். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் நிமிர்த்தம் 1976ஆம் தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் தமிழீழ பிரகடனத்தைச் செய்வதற்கு சம்மதித்தார்.
வட்டுக்கோட்டைப் பிரகடனத்தைச் செய்வதற்கு முன்பதாக பாராளுமன்றத்திலே தனது பதவியைத் ரத்துச் செய்து இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் உங்கள் அரசியல் சாசனத்தை நிராகரிக்கிறார்கள். அதனைச் சோதிப்பதற்காக எனது பாராளுமன்ற பதவியை துறந்து எனது தொகுதியில் போட்டியிடத் தயார் நீங்கள் எதிர்த்து அதனைப் பொய் என்று நிருபிக்கலாம் என சாவால் விட்டார். அந்த தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார்.
பிரிவினையை நாங்கள் கோரவில்லை. கோரும் நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஆனால் எப்போது எனது மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்குமாகவிருந்தால் அதில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என தந்தை செல்வா அடிக்கடி கூறுவார். வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பு தந்தை செல்வா 1977ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 26ஆந் திகதி அவர் இறந்தார். பின்பு நாங்கள் 18 பேர் பாராளுமன்றத்துக்குச் சென்றோம். அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக வந்தார். பல வெளிநாட்டுத் தலைவர்களுடன் இராஜதந்திரிகளுடன் எமது பிரச்சினைகள் தொடர்பாக மிக ஆளமான பேச்சுவார்தைகள் நடாத்தினோம். இந்திய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து பேசியபோது அவர் நீங்கள் பிரிவினையைக் கோரினால் ஆதரிக்க முடியாது. ஒரு சுயாட்சி முறையைக் கோரினால் நாங்கள் நிச்சயமாக ஆதரிப்போம் என அவர் கூறினார்.
அவர் இறந்த பின் பிரதமர் ரஜீவ் காந்தியுடைய காலத்தில் 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மாகாண சபை உருவாக்கப்பட்டு முதல்முறையாக மாகாண ரீதியாக ஓரவிற்கு அதிகார பகிர்வு வழங்கப்பட்டது. இதில் வடகிழக்கு இணைக்கப்பட்டு ஒரு மாகாண அதிகாரப் பகிர்வு அலகாக அந்த மாகாணங்களில் தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்தர்கள் என்ற அடிப்படையில் இரண்டு மாகாணங்களும் ஒன்றாக சேர்க்கப்பட்டன. தற்பொழுது உச்ச நீதிமன்ற தீர்பின் ஊடாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருகிறது.
சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன அது கை கூடவில்லை. அப்போது தமிழ் மக்கள் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய சக்தியாக இருந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கருத்தை மீறி எதையும் செய்வது ஒரு கடினமான விடயம். அவர்களும் ஒரு அரசியல் தீர்வுக்கு வரச் சம்மதம் என்று கூறிய பின்பும் அரசியல் தீர்வு ஏற்படவில்லை.
ரணில் பிரதமராக இருந்த காலத்தில் ஒஸ்லோ பிரகடணம் கொண்டு வரப்பட்டு
தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் உள்ளக சுயநரிணயத்தின் அடிப்படையில் ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு ஒருமித்த நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவு அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் முன் வைக்கப்பட்டது. அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு ஜனாதிபதியும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை திருத்த வேண்டும். அதனடிப்படையில் அதற்கு மேலதிகமாக அதிகார ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகாரபகிர்வு ஏற்பட வேண்டும் என் அடிப்படையில் பல்வேறு தெரிவுக் குழுக்கள் மற்றும் நிபுணர் குழுக்களை நியமித்து பல்வேறு அறிக்கைகள் மற்றும் சிபார்சுகள் செய்திருக்கின்றார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பல பேச்சுவார்தைகள் நடைபெற்றன. ஒரு நாட்டுக்குள் ஒற்றை ஆட்சியுடன் ஒரு தீர்வை காணுவதற்கு நாங்கள் முயற்சித்தோம். ஆனால் அவர் அதற்கு சம்மதமாக இருக்கவில்லை. எங்களை ஏமாற்றுவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொண்டார். அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. பாராளுமன்ற தெரிவுக் குழுவில் எங்களை பங்கெடுக்கச் செய்வதற்கு எடுத்த முயற்சிகளுக்கும் நாங்கள் இடமளிக்கவில்லை.
மக்களின் ஜனநாயக முடிவின் ஊடாக தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்தியதன் அடிப்படையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் மக்களுடைய ஜனநாயக சக்தியை எடுத்துக் காட்டுகிறது.
தமிழ் மக்கள் எந்தவிதமாக வாக்களிக்கப் போகின்றார்கள். என்பதை சர்வதேச சமூகம் மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தது. தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதாகவிருந்தால் அது நியாயமான அதிகாரத்தைத் தர வேண்டும். சுயாட்சியைத் தரவேண்டும் எமது பொருளாதார சமூக, கலாசார, அரசியல் தேவைகளை நாங்கள் நிறைவேற்றக்கூடிய வகையில் தீர்வு அமைய வேண்டும் என்று உறுதியாக இருந்ததன் காரணத்தின் நிமிர்த்தமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷ அதற்கு இடமளிக்காததன் நிமிர்த்தமும் தமிழ் மக்கள் எவ்விதமாக வாக்களிக்கப் போகின்றார்கள் என்பதை சகலரும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேர்தல் முடிவின் மூலம் எமது தேவை அவர்கள் அறிந்திருப்பார்கள்.
ஒரு நாட்டில் பிரச்சினைகள் தொடர் கதைகளாக இருக்க முடியாது. ஒருகால கட்டத்தில் முடிவு வர வேண்டும். எம்மைப் பொறுத்தவரை முடிவு வர வேண்டிய காலம் வந்துவிட்டது. சர்வதேச மனிதபிமான சட்டங்களை மீறி நடந்ததன் காரணமாக தற்போது இலங்கை அரசாங்கம் குற்றவாளி கூண்டில் நிற்கின்றது. அந்த விடயம் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளது. அந்த விசாரணை அறிக்கை பங்குனி மாதம் வெளியிட்டிருக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் எழுத்துமூலமான வேண்டுகோளின் அடிப்படையில் அது பிற் போடப்பட்டுள்ளது. புரட்டாதி மாதம் வெளி வர வேண்டும்.
இந்த நாட்டிலே நாங்கள் ஒரு பாராளுமன்ற தேர்தலை எதிர்பார்த்து நிற்கின்றோம். அந்த பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகின்ற போது தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் எவ்விதமாக வாக்களிக்கின்றார்கள் என்பதை சர்வதேச சமூகம் மிக உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கும். எதற்காக வாக்களிக்கப் போகின்றார்கள். தங்களுக்கு ஒரு உறுதியான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களுடன் பேசுகின்ற பொழுது தமிழ் மக்கள் யாரை ஆதரித்துள்ளார்கள் என எதிர்பார்பார்கள்.
எங்களுடைய கரங்களைப் பலப்படுத்தக்கூடிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அந்த கடமையில் தமிழ் மக்கள் தவறக் கூடாது. சிங்கள மக்கள் மத்தியில் சென்று உண்மையபை பேசுபவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைப் பொறுத்தவரையில் எனக்கு நம்பிக்கையிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வை நாங்கள் வழங்க வேண்டும் அவர்கள் சம அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழ வேண்டும். சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி இருக்க வேண்டும் என்ற உண்மை சிங்கள மக்கள் மத்தியில் அவர் முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களையும் திருகோணமலையில் இரண்டு மற்றும் அம்பாறை மற்றும் வடக்கு மாகாணங்களிலிருந்து குறைந்தது 20 பேர் பாராளுமன்றம் செல்வோமாகவிருந்தால் பாராளுமன்றத்தில் பாரிய சக்தியாக இருப்பதுடன் இதுதான் தமிழ் மக்களுடைய அபிலாசை என்ற செய்தியை ஆட்சியில் இருப்பவர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்புவோம். ஆகவே உங்களுடைய வாக்குபலத்தை எதிர்வரும் தேர்தலில் சரியாகப் பயன்படுத்தி எங்களுடைய கரத்தைப் பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். என்றார்.

IMG_0028

IMG_0031

IMG_0043

IMG_0056

IMG_0082

IMG_0085

IMG_0088

IMG_0096

IMG_0116

IMG_0214


IMG_0215

No comments:

Post a Comment