April 19, 2015

யாழில் பலத்தை நிறுவுவதில் கட்சிகளின் மேதின ஏற்பாடுகள்!

எதிர்வரும் மேதினத்தை வடக்கில் பெருமெடுப்பில் நடத்தி தமது பலத்தை காட்ட கட்சிகள் தயாராகிவருகின்றன. அடுத்துவரும் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாமென்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தனது பலத்தை தெற்கினில் காட்ட ரணில் அரசு முற்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியோ உள்முரண்பாடுகளால் குழப்பமுற்றுள்ளது.
இந்நிலையில் வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டினில் மேதினத்தை பெருமெடுப்பினில் நடத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு முற்பட்டுள்ளது.இது தொடர்பான கூட்டமொன்று இன்று யாழில் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறுபுறத்தே ஆட்சியில் இல்லாமல் இருக்கும் ஈபிடிபி அடுத்த தேர்தலில் நீண்ட இடைவெளியின் பின்னர் சொந்த சின்னமான வீணையில் போட்டியிடவுள்ளதால் தமது பலத்தை காட்ட அக்கட்சியும் முற்பட்டுள்ளது.
இதனிடையே புத்துணர்ச்சி பெற்றுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் வடமராட்சியிலேயே இம்முறையும் மேதினத்தை கொண்டாடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக வடமராட்சியில் நீண்டதொரு இடைவெளியின் பின்னர் அக்கட்சிக்கு மக்களது ஆதரவு அலை என்றுமில்லாத அளவில் வீசத்தொடங்கியுள்ளது. அதனை அடுத்த தேர்தலில் அறுவடை செய்ய முன்னணி முற்பட்டுள்ளது.
இதனிடையே கூட்டமைப்பில் தனித்து அரசியல் செய்யும் சிறீதரனும் கிளிநொச்சியில் மேதினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் தென்னிலங்கை கட்சிகள் வடக்கில் மேதினத்தை அனுஸ்டிப்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை.

No comments:

Post a Comment