August 16, 2014

ஐ.நா விசாரணையில் த.தே.கூட்டமைப்பும், த.தே.ம.முன்னணியும் சாட்சியமளிப்பார்களா?

ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டிராத சூழலில் கூட்டமைப்பால் என்ன செய்ய முடியும்? தற்போதைய சூழலில் இரண்டு
விடயங்களை, கூட்டமைப்பால் செய்யக் கூடிய நிலை காணப்படுகிறது. ஒன்று, சுமந்திரன் குறிப்பிடுவது போன்று, சாட்சிகளை திரட்டி, அதனை உரிய இடத்திற்கு சேர்பிக்க முடியும். இரண்டு, கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் நேரடியாக சாட்சியமளிக்கலாம். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம், கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களால், எவ்வாறு சாட்சியாக மாற முடியும்? அது சாத்தியமான ஒன்றே!
ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டிராத சூழலில் கூட்டமைப்பால் என்ன செய்ய முடியும்? தற்போதைய சூழலில் இரண்டு
   இன்று கூட்டமைப்பின் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சிறிதரன் இறுதி யுத்தத்தை பார்த்த ஒருவர். இறுதி யுத்தத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஒருவர். எனவே யுத்தத்தின் போதும், யுத்தம் நிறைவுற்ற பின்னரும் மக்களோடு இணைந்திருக்கும் ஒருவர் என்னும் வகையில் சிறிதரனால், பல்வேறு விடயங்களை ஜ.நா.விசாரணைக்குழுவின் முன்னால் நேரடியாகவே சொல்ல முடியும்.
அதேபோன்று, வடக்கு மாகாணசபையில் உறுப்பினராக இருக்கின்ற முல்லைத்தீவை பிரதிநிதித்துவம் செய்யும் ரவிகரன் மற்றும் கிளிநொச்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பசுபதிப்பிள்ளை ஆகியோர், போர் எழுச்சிக்குழுவில் இருந்தவர்கள். இறுதிவரை வன்னி யுத்த அரங்கில் இடம்பெற்ற அனைத்தினதும் சாட்சியாய் இருப்பவர்கள். மக்கள் பிரதிநிதிகளான இவ்வாறானர்கள் சாட்சியமளிக்க முன்வருவார்களாயின் அதனை அரசாங்கம் சுலபமாக தடுத்துவிடவும் முடியாது. இவர்களுக்கு இருப்பது போன்ற யுத்தகால அனுபவங்கள் ஏனைய நாடாளுமன்ற அல்லது மாகாணசபை உறுப்பினர்கள் எவருக்கும் இல்லை.
எனவே கூட்டமைப்பின் தலைமை இந்தக் கோணத்தில் சிந்தித்தால், அது விசாரணையில் கூட்டமைப்பின் தலையீட்டை அதிகரிக்க உதவும். மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அதேபோன்று மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும், சாட்சியமளிப்பார்களாயின் மக்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை ஏற்படும். இதனைத் தொடர்ந்து அச்சப்படுபவர்கள் கூட தங்களின் சாட்சிகளை பதிவு செய்ய முன்வருவர். மேலும் சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களில் பலர் கூட்டமைப்பிடம் தங்களின் சாட்சியங்களை ஒப்படைக்கக் கூடியதொரு சூழலும் மலரும்.
சாட்சிகள் அவ்வாறு கூட்டமைப்பை நோக்கி அணிதிரள வேண்டுமாயின் அதற்கு முன் நிபந்தனையாக மேற்குறிப்பிடப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஐ.நா சாட்சியாக மாறவுள்ளனர் என்னும் செய்தி அவர்களை போய்ச் சேர வேண்டும்.
இதே போன்று, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தான் தொடர்பில் இருந்ததாக, அவரே சில இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். அவரும் நடந்து முடிந்த போர் குறித்து தனக்குத் தெரிந்த விடயங்களை ஐ.நா விசாரணைக் குழுவின் முன்னால் நேரடியாகவே முன்வைக்க முடியும்.
இலங்கைக்குள் செல்லாமலேயே தங்களால் விசாரணையை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும் என்று நவிப்பிள்ளை குறிப்பிடுவதிலிருந்து, ஐ.நா விசாரணைக்கு தேவையான பல்வேறு ஆதாரங்கள் ஏலவே அவர்கள் வசமுள்ளது போல் தெரிகிறது. எனவே இறுதி யுத்தத்தின் போது அகப்பட்டவர்களின் தகவல்கள் போதியளவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்னும் முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.
எனவே இத்தகையதொரு சூழலில் சாட்சியமளிக்கக் கூடிய தகுதிநிலையில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகவே ஐ.நா விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிப்பார்களாயின், அது விசாரணையை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இது குறித்து கூட்டமைப்பு கருத்தில் கொள்ளுமா?
மேலே குறிப்பிட்டவாறான மக்கள் பிரதிநிதிகள் ஐ.நா விசாரணையின் முன்னிலையில் சாட்சியமளிக்க தயங்குவார்களாயின், அவர்கள்கள் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழவும் வாய்ப்புண்டு. மேலும் இவர்கள் இதுவரை சொல்லிவந்த விடயங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழலாம்.
இன்றைய சூழலில், மக்கள் எதிர்ப்பார்ப்பது எவர் பிரபாகரனை ஆத்மார்த்த தலைவராக கைக்கொள்கின்றார் என்பதையோ, எவர் புலிகள் குறித்து புகழ்கின்றனர் என்பதைப் பற்றியோ இல்லை, மாறாக வரலாற்றின் முக்கியமான தருணங்களில், தங்களது நலனை முன்னிறுத்தி உண்மையிலேயே எவர் செயற்படுகின்றார் என்பதையே மக்கள் உற்றுநோக்குகின்றனர்.
நன்றி,
தினக்குரலின் "புதிய பண்பாடு" அரசியல் இதழுக்காக,
-யதீந்திரா-

No comments:

Post a Comment