August 31, 2016

மன்னார் ஆயர் யோசேப்பு ஆண்டகை பற்றிய நூல் வெளியீடு

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் பற்றிய ஆங்கில நூல் ஒன்று நாளை வியாழக்கிழமை (01.09.2016) மாலை 3.00 மணிக்கு மன்னார் குடும்ப நல பொது நிலையினர் பணியக மண்டபத்தில்  வெளியிடப்படவுள்ளது.

அருட்திரு கலாநிதி வின்சன்ற் பற்றிக் (அமதி) அடிகளார் எழுதிய ‘A Living Hero’   (ஓர் வாழும் நாயகன்) என்ற பெயரைக் கொண்ட இந்த ஆங்கில நூலானது மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் எழுதிய சில ஆவணங்களினதும், அவரைப்பற்றி எழுதப்பட்ட சில ஆவணங்களினதும் தொகுப்பாக அமைந்துள்ளது.
மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு. ஏ. விக்ரர் சோசை அடிகளார் இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்குகின்றார்.
மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இந்நிகழ்வுக்கு முன்னிலை வகிக்கின்றார்.
 இவ்விழாவுக்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு  கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை கலந்துகொள்கிறார்.

 மேலும் மன்னார் மறைமாவட்டத்தின் நான்கு மறைக்கோட்ட முதல்வர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

சர்வமதத் தலைவர்கள் மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மெல், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

  இந்நிகழ்வின் வரவேற்புரையை கலையருவி அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நிகழ்த்துகிறார். நூல் வெளியீட்டுரையை மன்-பற்றிமா மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ் வழங்குகிறார்.

 நூல் மதிப்பீட்டுரையை மன்னார் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. மாட்டின் டயஸ் நிகழ்த்துகிறார்.

ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் வின்சன்ற் பற்றிக் அடிகளார் வழங்குகின்றார். இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள்.

No comments:

Post a Comment