July 23, 2016

விட்டுக்கொடுப்பே சக்தி வாய்ந்த ஆயுதம்!!ரவூப் ஹக்கீம்

அமரர் மு. சிவசிதம்பரம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய நினைவுப் பேருரையின் போது தெரிவித்த கருத்துகள் மிக உன்னிப்பாக கவனம் செலுத்தப்பட வேண்டியனவாகக் காணப்படுகின்றன.


இன்றைய அரசியல் களத்தில் அந்த உரையின் சாராம்சங்கள் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியவையாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

தமிழ், முஸ்லிம் சமுகங்களுக்கிடையே சேதமில்லாத விட்டுக்கொடுப்பின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் அமைச்சர் ஹக்கீம் நல்லிணக்கத்தை எவரும் இரவோடிவாக அடைந்துவிட முடியா தெனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். உண்மையிலேயே நல்லிணக்கத்தை நினைத்தவுடன் அடைய முடியும் என எவராலும் எதிர்பார்க்க முடியாது.

எமது நாடு சுதந்திரமடைந்த பின்னர் நாட்டின் அரசியல் பயணத்தில் எவரும் பூக்குவியலில் பயணிக்கவில்லை. வழிநெடுகிலும் முள்ளும், கற்களுமே காணப்பட்டன.

பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் இது சகஜமாகக் காணப்படுகின்ற போதிலும் ஒவ்வொரு தலைவரும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்ற இலட்சியக் கனவுடனேயே தமது பயணங்களை மேற்கொண்டனர். ஆனால் அது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதை ஒவ்வொரு காலகட்டத்திலும் எம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பன தமிழ், முஸ்லிம்களுக்கிடையே பாரிய இடைவெளியை தோற்றுவித்துள்ளன. இன நெருக்கடி உருவான ஆரம்பத்திலேயே தமிழ்,- முஸ்லிம் சமூகங்களிக்கிடையேயான நம்பிக்கை தூரமாகியதுடன் சந்தேகக் கண்கொண்டே இரு சமூகங்களும் ஒருவரையொருவர் பார்க்கத் தொடங்கினர்.

இதன் விளைவாக நாடு எதிர்கொண்ட சவால்கள் மிகப் பெரியளவாகவே காணப்பட்டன. நல்லிணக்கத்தைக் கட்டயெழுப்பும் முயற்சிகளில் கூட இடையிடையே அவ நம்பிக்கைகளே மேலெழும்புவதைக் காண முடிந்தது.

தேசிய நெருக்கடிக்கான தீர்வு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியனவாக அமையாத வரை நாட்டில் நல்லிணக்கம் சாத்தியப்படக் கூடியதல்லவென்பதை எவராலும் மறுப்பதற்கில்லை.

அதே சமயம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு வடகிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகங்களையும் திருப்திப்படுத்தக் கூடியவாக அமைய வேண்டுமென்பதில் முஸ்லிம் தரப்பு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

அத்துடன் பெரும்பான்மை சமூகம் முன்வைக்கும் தீர்வு சகலரையும் திருப்திப்படுத்துவதாக அமையவேண்டியதும் முக்கியமானதாகும்.இவ்வாறானதொரு நிலையிலேயே நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகலரையும் ஒருஉநிலைப்பாட்டுக்குள் கொண்டு வருவது கடினமான விடயமாகும்.

ஆனாலும் சகலதரப்புகளும் திருப்தி கொள்ளக்கூடிய இலக்கை எட்ட முடிந்தால் அது கூட ஒரு வெற்றியாகக் கருத முடியும்.

இப்படிப்பட்டதொரு கள நிலைமையிலேயே, அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமரர் சிவசிதம்பரம் நினைவுக் கூட்டத்தில் கடந்த கால வரலாற்றுப் பின்னணியுடன் நாம் எவ்வாறு முன்னேற முடியும். கசப்பாக இருப்பினும் மருந்தைக் குடித்தால் தான் சுகமடைய முடியும் என்கின்ற எதிர்பார்ப்புடன் விட்டுக்கொடுப்புக்கு தயார் எனும் தமது தரப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

நல்லிணக்கத்தை எட்டும் முயற்சியில் கூட இந்த விட்டுக்கொடுப்பு மிக முக்கியமானதாகவே உள்ளது. கடந்த கால கசப்பான அனுபவங்கள் எமக்கு உணர்த்தி நிற்கும் பாடங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்தையும் கறுப்புக் கண்ணாடி அணிந்து பார்க்க முடியாது. இந்தவிடயம் நாளையுடன் முடியக்கூடியதல்ல. கடந்த காலத்தில் நாம் எங்கு தவறு செய்தோம். யார் பிழை விட்டார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தால் நல்லிணக்கம் எட்டாக்கனியாகவே முடிவுக்கு வரலாம்.

இந்த சேதமில்லாத விட்டுக் கொடுப்பு என்பது பரந்துபட்ட ஒரு விடயமாகும். தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் நிறைய இணக்கப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட வேண்டும்.

அமைச்சர் ஹக்கீமின் இந்த அறிவிப்பை நாம் சாதக சமிக்ஞையுடனேயே நோக்க வேண்டும். தொடர்ந்தும் நாம் ஏட்டிக்குப் போட்டியாகி எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது. மனிதாபிமான அடிப்படையில் விட்டுக்கொடுப்பு ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும்.

விட்டுக் கொடுப்பு ஆயுதத்தைப் பாவித்து பல சாதனைகளை சாதிக்க முடியும். இந்த சேதமில்லாத விட்டுக்கொடுப்பு அனைத்து இன மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் சக்தியாகக் கூட மாற்றமடையச் செய்ய முடியும்.

தமிழினத்தின் மாமனிதனாக பார்க்கப்பட்ட அமரர் சிதம்பரத்திடம் கூட நிறையவே விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இருந்தது.

அந்த மகோன்னத மனிதனின் நினைவுரையில் வெளிப்படுத்தப்பட்ட நல்லிணக்கம், சேதமில்லாத விட்டுக்கொடுப்பு இரண்டும் எமது நாளைய விடியலுக்கு ஒளிபரப்புவதாக அமைய வேண்டும் என எதிர்பார்ப்போம்..

No comments:

Post a Comment