July 13, 2016

மாகாண அரசே ! நீ அஞ்சுவதும் , அடிபணிவதும் , யாருக்காக ? எதற்காக ?

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டால் தமிழக முதலமைச்சர் உடனே இந்திய பிரதமருக்கு மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி கடிதம் எழுகிறார்.
ஆனால் வடமாகாண சபை வடமாகாண மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் இதுவரை என்ன காத்திரமான நடவடிக்கை எடுத்து உள்ளது என வடமாகாண மீனவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்திய மற்றும் உள்ளூர் இழுவை படகுகளை கட்டுபடுத்த கோரி வடமாகாண சபை முன்பாக வடமாகாண மீனவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை செவ்வாய்க்கிழமை முன்ன்டுத்து இருந்தனர்.

அந்த போராட்டத்தின் போதே மீனவர்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பி இருந்தனர்.

மீனவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் , 

வடமாகாண சபை அமைக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்ற போதிலும் இதுவரை மாகாண சபை இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி இலங்கை மத்திய அரசுக்கோ , இந்திய மத்திய மாநில அரசுக்கோ அழுத்தம் கொடுக்கவில்லை.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கோரி இலங்கை மத்திய அரசு , இந்திய மத்திய மாநில அரசுக்கு வடமாகாண சபை தொடர் அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

அதேவேளை தென்னிலங்கை மீனவர்களின் அத்து மீறல்களையும் கடுப்படுத்த வேண்டும். அத்துடன் வடமாகாணத்தில் பெருமளவான கடற்பிரதேசம் மற்றும் கரையோரம் என்பன கடற்படையின் ஆக்கிரமிப்பின் கீழ் தான் உள்ளது அதானால் வடமாகாண மீனவர்கள் சுதந்திரமாக தமது தொழிலை முன்னெடுக்க முடியவில்லை.

யுத்தம் நடைபெற்ற கால பகுதியில் வடமாகாண மீனவர்கள் உயிரை பணயம் வைத்து கடற்தொழிலில் ஈடுபட்டனர். அப்போது தமது உயிருக்கு பயந்து தென்னிலங்கை மீனவர்களோ இந்திய மீனவர்களோ எமது வடமாகாண கடற்பிரதேசத்தினுள் வருவதில்லை. தற்போது யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அவர்கள் எமது கடற் பிரதேசத்தினுள் ஊடுருவி எமது கடல் வளங்களை அழிக்கின்றார்கள்.

இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயன்படுத்தி தென்னிலங்கை மீனவர்கள் வடபகுதி கடலில் மீன் பிடியில் ஈடுபடுகின்றார்கள். அவர்கள் தமது பிரதேசத்தில் இவ்வாறு தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமையை பயன்படுத்தி மீன் பிடிப்பதில்லை எமது பிரதேசத்தினுள் நுழைந்து தடைசெய்யப்பட்ட மீன் பிடி முறைமையை பயன் படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டு எமது கடல் வளங்களை திட்டமிட்ட முறையில் அழிக்கின்றார்கள்.

இவற்றை எல்லாம் உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்தையும் கோருகின்றோம். இல்லை எனில் கடந்த அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தது போன்று  நல்லாட்சி அரசாங்கம் என கூறிக் கொள்ளும் இந்த அரசாங்கத்திற்கும் எதிராகவும் பல்வேறு வழிகளில் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment