June 30, 2016

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்குமாறு ஜெனிவாவில் அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்து!

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பானவிவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேசமனித உரிமைகள் அமைப்புகள் அனைத்தும் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு மிகவும் கட்டாயமாக இடம்பெற வேண்டுமென வலியுறுத்தின.


அமெரிக்கா, நெதர்லாந்து, கனடா, ஜப் பான், நோர்வே, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, கொரியா உள்ளிட்ட நாடுகளும் சிறுபான்மை உரிமைக்கான அமைப்பு, சர்வதேசயூரிகள் ஆணைக்குழு, அனைத்துவிதமான அநீதிகளுக்குமான அமைப்பு உள்ளிட்ட தரப்புக்களும் சர்வதேச நீதிபதிகளை நேற்றுஜெனிவாவில் வலியுறுத்தின.

முதலில் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேயின் தனது அறிக்கையை வெளியிட்டதன் பின்னர் இலங்கையின் சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றினார்.

அதன் பின்னர் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.

கனடா நாட்டின் பிரதிநிதி உரையாற்றுகையில்,

ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய் மூல அறிக்கையை வரவேற்கிறோம். பிரேரணை ஊடாக இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஊக்குவிக்கிறோம்.குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கிறோம். பொறுப்புக் கூறல் முறையானது சுயாதீனமாக இருக்க வேண்டும். அதில் அர்த்தமுள்ள சர்வதேச பங்களிப்பும் அமைவதானது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை கொள்ள செய்யும். கனடா இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக இருக்கிறது என்றார்.

ஜப்பான் நாட்டின் பிரதிநிதி உரையாற்றுகையில்,

இலங்கையின் உள்ளக விசாரணையின் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பும் ?அவசியமானதாகும். இது மிகவும் முக்கியத்துவம் மிக்கது. இதற்காக ஜப்பான் இந்த செயற்பாட்டில் பங்கேற்பதற்காக சட்டத்தரணி ஒருவரை வழங்குவதற்கு தயாராக இருக்கிறது என்றார்.

ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் கி.ஹார்பர் உரையாற்றுகையில்,

இலங்கையின் தற்போது அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் நீதி பொறிமுறையில் இன்னும் பல படிகள் பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கு தேவையான முழுமையான உதவிகளை செய்வதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது என்றார்.

டென்மார்க் பிரதிநிதி உரையாற்றுகையில்,

இலங்கை அரசாங்கம் மனித உரிமை பாதுகாப்பு சிவில் சமூக பாதுகாப்பு என்பவற்றில் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளை பாராட்டுகிறோம். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாட்டில் சர்வதேச பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கையை டென்மார்க் வலியுறுத்துகிறது.வடக்கு கிழக்கு மனித உரிமை செயற்பாட்டில் முன்னேற்றகரமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

நோர்வே நாட்டின் பிரதிநிதி உரையாற்றுகையில்,

கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுலாக்குவதில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டங்களை வரவேற்கிறோம். அதேவேளை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கான பொறிமுறையில் பொதுநலவாய மற்றும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் விசாரணையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்துகின்றோம் என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி உரையாற்றுகையில்,

இலங்கை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். பயங்கரவாத தடைச் சட்டத்தையும் நீக்குமாறு நாம் வலியுறுத்துகிறோம்.வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் சிவில் செயற்பாடுகளிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறும் காணிகளை மீள வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்றார்.

அவுஸ்திரேலியாவின் பிரதிநிதி உரையாற்றுகையில்,

அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கின்றோம். ஆனால், நல்லிணக்க செயற்பாடுகளின் விரைவான நடைமுறை அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம் என்றார்.

நியூஸிலாந்து நாட்டின் பிரதிநிதி உரையாற்றுகையில்,

இலங்கை பல முன்னேற்றங்களை வெளிக்காட்டியுள்ளது. இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறுமை செயற்பாட்டின் சர்வதேச நாடுகளின் நீதிபதிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்பதை வலியுறுத்துகின்றோம் என்றார்.

அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிரான அமைப்பின் பிரதிநிதி உரையாற்றுகையில்,

பிரேரணைக்கு அனுசரணை வழங்கி அர்ப்பணிப்பை வெளிக்காட்டிய அரசாங்கத்தை பாராட்டுகின்றோம். காணி மீள் வழங்குவதில் ஏற்படும் தாமதம் பாதுகாப்பு மறு சீரமைப்பு குறைபாடு, குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல்ப,யங்கரவாத தடைச் சட்டம் நீடிக்கப்படுகின்றமை, தமிழ் மக்கள் சித்திரவதைக்கு உள்ளாகின்றமை, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தாமதம் என்பன காணப்படுகின்றன.

எனவே அரசியலமைப்பு மறுசீரமைப்பானது அரசியல் தீர்வு குறித்து கட்டாயமாக அவதானம் செலுத்த வேண்டும். அதிகாரப் பகிர்வு மாதிரி ஒன்று இதில் ஆராயப்பட வேண்டும்.உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு என்பது அவசியமானது என்பதையும் வலியுறுத்திக் கூறுகின்றோம். சர்வதேச பங்களிப்பானது பிரேரணை அமுலாக்கத்தை வெற்றியடைச் செய்யும் என்றார்.

No comments:

Post a Comment