May 19, 2016

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நாள் !

தமிழினப்படுகொலையின் உச்சகட்ட அழிப்பான மே18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும்வகையில் சுவிஸ்வாழ் தமிழ்பேசும் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.

18.05.2016 சுவிஸ் பேர்ன் பாரளுமன்ற முன்றலில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களோடு சுவிஸ் ஈழத்தமிழரவையின் பிரதான ஒருங்கிணைப்புடன்
 சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு, அக்கினி பறவைகள், தமிழ் இளையோர் அமைப்பு போன்ற அமைப்புக்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிபிடத்தக்கது.

ஏழாண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காமல் இருக்கும் தமிழினப்படுகொலைக்கு நீதியை பெறும்வகையிலும் அதற்காக சர்வதேசமும் சுவிஸ் நாடும் செய்யவேண்டிய கடமையை உணர்த்தியும் பதாதைகளை தாங்கியவண்ணம்  தமிழர்கள் தன்னெழுச்சியோடு குரல் எழுப்பினர்.

இந்த நிகழ்வின் பிரதான பேச்சாளர்களாக சுவிஸ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், மனித உரிமைகள் சட்டத்தரணி ஒருவரும் மற்றும் பல தேசிய செயற்பாட்டாளர்களும் உரையாற்றினர்.

குறிப்பாக சுவிஸ் மக்கள் கட்சியின் தேசிய நாடாளுமன்ற உறுப்பினரான Yvette Estermann அவர்கள் குறிப்பிடுகையில் மனித உரிமைகளை முற்றாக சிதைத்து செயற்படும் சிறீலங்கா அரசுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் சுவிஸ் நாட்டின் செயலானது மனித குலத்திற்கு இழுக்கான செயலென சுட்டிக்காட்டினார் அத்துடன் இவ் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது எமது அனைவரது கடமை என்றும் தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து உரையாற்றிய சுவிஸ் பசுமைக்கட்சியின் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் Arslan Sibel அவர்கள் உரையாற்றுகையில் இன்றும் சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் அடக்கப்பட்டுவருவதாகவும் கருத்துச்சுதந்திரம், ஊடக சுதந்திரம் என பல அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகவும் தெரியப்படுத்தியிருந்தார் அத்துடன் தமிழ் அகதிகளை நாடு கடத்தும் சுவிசின் நிலைப்பாடானது மனித உரிமைகளை அவமதிப்பதோடு இலங்கை தொடர்பான கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக சுவிஸ் அரசானது பதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுடனும் கலந்தாய்வு செய்து போதிய மதிப்பீட்டுடன் இவ்விடயத்தை கையாளவேண்டியது நிலையான தீர்வை நிலை நாட்டுவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறியிருந்தார்.

தொடர்ந்து உரையாற்றிய  பாதிக்கப்பட்ட இனங்களின் சமூகம் என்ற அமைப்பின் இயக்குனரும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான Christoph Wiedmer அவர்கள் உரையாற்றுகையில் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையால் போர்க்குற்றங்கள், இனப்படுகொலை,மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளை நடத்த முடியாதென்றும் அனைத்துலக சுயாதீன விசாரணையே நடத்தப்படவேண்டுமென்றும் திண்ணமாக கூறினார்.  தொடர்ந்து குறிப்பிடுகையில் ஆட்சி மாற்றத்தின்பின்பும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறதென்றும் சாட்சிகளுக்கான எந்தவித பாதுகாப்பும் இல்லையென்றும் கருத்து கூறியிருந்தார்.

இந்த நிகழ்வில் பல வேற்றின ஊடகங்கள் கலந்துகொண்டதுடன் தமிழினப்படுகொலையை சுவிஸ் மக்களுக்கு தமது ஊடகங்களினூடாக எடுத்துச்சென்றனர்.
சுவிஸ் ஈழத்தமிழரவையால் தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பாக 32 பக்கங்களைக்கொண்ட ஒரு விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு சுவிஸ் அரசாங்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவ் அறிக்கையை பார்வையிடுவதற்கு கீழே கொடுக்கப்படும் இணைப்பை
அழுத்தவும்:

மேலும் சுவிஸ் ஈழத்தமிழரவையின் செயற்பாட்டை விளக்கும் முகமாக “எதை நோக்கி பயணிக்கின்றோம்” என்ற செயற்பாட்டு கையேடும் வெளியிடப்பட்டது அக் கையேட்டை  பார்வையிடுவதற்கு இங்கே அழுத்தவும்:

உணர்வு பூர்வமாகவும் மக்களின் ஆதரவோடும் நடைபெற்ற இந்த நிகழ்வு தமிழ்மக்களின் உணர்வலைகளை பிரதிபலித்திருந்தது.









No comments:

Post a Comment