வாழும் கலை நிறுவுனர் ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 59 ஆவது பிறந்த தினத்தையொட்டி யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அமைந்துள்ள வாழும் கலை நிலையத்தின் ஏற்பாட்டில் நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அண்மையிலுள்ள பகுதிகளில் மரம் நடுகை இடம்பெற்றது.
இப் பகுதியின் வீடுகளிலும், இடங்களிலும் தென்னை, மா, நெல்லி, பலா உள்ளிட்ட பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டன.
இதேவேளை, ரவிசங்கர் குருஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (10.5.2015) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் குருதிக் கொடையும் இடம்பெற்றது. இதில் 16 பேர் கலந்து கொண்டு குருதி தானம் செய்தனர்.
குறித்த குருதிக் கொடை நிகழ்வு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த நிலையத்தின் யாழ்.மாவட்டப் பொறுப்பாளரும், சர்வதேச வாழும் கலை ஆசிரியருமான டி.சாயிராம்ஜி, வாழும் கலை நிறுவுனர் பூஜ்ய ஸ்ரீ ரவிசங்கரின் 59 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை 16 பேர் கலந்து கொண்டு இரத்த தாhனம் செய்தனர்.
பிரத்தியேகமாகப் பெண்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். இந்த நாளில் இரத்ததானம் செய்ததன் மூலம் உயிர்களைக் காப்பாற்றிய மன நிறைவடைகிறோம்.
இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள் எனவும், ரவிசங்கர் குருஜியின் பிறந்தநாளில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சமூகத் தொண்டுகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாளை மறுதினம் புதன்கிழமை (13.5.2015) ரவிசங்கர் குருஜியின் பிறந்தநாளன்று பிறந்தவர்கள் யாழ்.வாழும் கலை நிலையத்தால் அன்றைய தினம் பிற்பகல் 5 மணி முதல் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தெற்கு வீதி வளாகத்தில் இடம்பெறும் பிறந்த தின விழாவில் விசேடமாகக் கௌரவிக்கப்படவுள்ளனர். இந்த விழாவில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
No comments:
Post a Comment