May 12, 2015

எமது பேரம் பேசும் சக்தியை நிரூபிக்கும் காலம் நெருங்கிவிட்டது: சி.சிறீதரன்( படங்கள் இணைப்பு)

தமிழர்களைப் பொறுத்தவரை 2009க்கு பின்னர் நடத்தப்பட்ட  தேர்தல்கள் எமது விடயத்தை சர்வதேசத்துக்கு சொல்கின்ற ஆயுதமாக மாறியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் புத்தூர் கலைவாணி சனசமூக நிலையத்தில் நேற்று தமிழரசு கட்சியின் புன்னாலைக்கட்டுவன் பிரதேசகிளைத்தலைவர் லோகன் தலைமையில் சமகால அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் இப்பொழுது மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றோம். அதனால் தமிழர்களின் ஜனநாயக பேரம் பேசும் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் நோக்கில் கடந்த அரசாங்கங்களால் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் கொள்கை வழி அரசியலில் வழுவாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பெரும் சக்தியாகவும், தமிழர்களின் குரலாகவும் இருந்துவருகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் மக்களும், அவர்களின் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவும் இருந்தது.
எனவே இந்த நாட்டில் சர்வதேச அனுசரணையுடன் ஒரு மாற்றம் ஏற்பட்டு எமக்கான நிரந்தர தீர்வு ஒன்று ஏற்பட்டு நாம் எமது பூர்வீக நிலத்தில் வாழ்கின்ற சூழல் உருவாக வேண்டுமாயின் எமது சக்தியை நாம் சர்வதேசத்துக்கும் இந்த நாட்டுக்கும் மீண்டும் காட்டவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கடந்த காலங்களில் எதிரிகளின் பக்கம் சென்ற ஒரு சில ஆசனங்களும் இம்முறை தமிழ்த் தேசியத்தின்பால் திரும்பவேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.
இந்ந நிகழ்வுகளில் கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி மற்றும் பொதுமக்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment