April 22, 2015

ரவிராஜ் கொலைச் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதிக்க உத்தரவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை, மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்ணான்டோ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் என்ற நபர், வேறு பல ஆட்கடத்தல்களுடனும் சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், நேவி சம்பத்தின் வீட்டிலிருந்து போலி அடையாள அட்டைகள் மற்றும் தோட்டாக்கள் போன்றன மீட்கப்பட்டதாக, குற்றப்புலனாய்வு பிரிவினர் தாம் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் ஆகியோர் கொலைசெய்யப்பட்டதன் பின்னணியிலும் இவர்கள் உள்ளனரா என்பது தொடர்பில், பொலிஸாரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழ் மக்களுக்காகவும் அவர்களது உரிமைக்காகவும் துணிந்து குரல் கொடுத்து வந்த நடராஜா ரவிராஜ், கடந்த 2009ஆம் ஆண்டு கொழும்பில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment