August 23, 2014

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுத்திட்ட உதவிகள் வேண்டும் - 14வது அமர்வில் ரவிகரன் வேண்டுகோள்!

யுத்தத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்படவேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கடந்த வடக்கு மாகாணசபை
அமர்வில் கோரியுள்ளார்.

புள்ளி அடிப்படையில் நிராகரிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்ட உதவிகள் மற்றும் குடும்ப பாதுகாப்பு கருதி கடன்களை பெற்று வீட்டுத்திருத்தங்களை செய்தவர்களுக்கான பகுதிசேத கொடுப்பனவுகள் போன்றவை தொடர்பில் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணை சில சில மாற்றங்களுடன் அவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அப்பிரேரணையின் விபரம் பின்வருமாறு,

யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு. இறுதி யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் சேதமடைந்தும் அழிவடைந்தும் உள்ளது. யுத்தத்திலிருந்து மீண்ட மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கி மீள்குடியேற்றத்தின் பின் பெரும்பாலானோர் தத்தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

திரும்பியவர்கள் உழைப்பதற்கு தொழில் இல்லை. பகுதிச்சேதத்திலிருந்த வீடுகளை வங்கிகள் கடனுதவு சங்கங்கள் என எவ்வழியால் கடன்களை பெறமுடியுமோ அவ்வழியால் பெற்று வீடுகளை திருத்தினார்கள். திருடர்கள் கிறீஸ் மனிதர்கள் மற்றும் மக்களை பாதுகாக்கிறார்கள் என்ற போர்வையில் இடர்பாடுகளையும் அடக்குமுறைகளையும் பிரயோகிப்பவர்களிடம் இருந்தும் குடும்ப அங்கத்தவர்களை குறிப்பாக பெண்களை காக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே வீடுகள் திருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று இவ்வாறு வீட்டுத்திருத்தத்தினை மேற்கொண்டர்களுக்கு அதற்கான கொடுப்பனவு இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இரண்டுபேர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு புள்ளிகள் போதாமல் வீடு கிடைக்கவில்லை. இப்போது இருவர் உள்ள குடும்பங்களே யுத்தத்தின் முன்னர் 3, 4, 5 என்ற எண்ணிக்கையில் இருந்தது. யுத்தத்தால் மடிந்தும் காணாமல் போயும் இன்று குடும்பங்களில் உழைக்கும் வர்க்கம் இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் இருவர் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு வீடு இல்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறான நிலைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு இல்லை என்ற நிலையையே இங்கு தோற்றுவிப்பதாக அமைகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு இல்லை என்ற நிலையில் வயது முதிர்ந்த நிலையில் உள்ள பெற்றோரைக்கொண்ட 35 வயதை கடந்த பெண்கள் உள்ள குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு யுத்தத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டு புள்ளி அடிப்படையில் வீட்டுத்திட்டங்கள் நிராகரிக்கப்பட்ட மக்கள் இங்கு ஏராளம். ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தைகிழக்கு என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

குடிசன மதிப்பீட்டின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2001க்கும் 2013க்கும் இடையில் கிட்டத்தட்ட 52ஆயிரம் பொதுமக்கள் குறைந்துள்ளனர். இப்படி அழிக்கப்பட்ட நிலையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களை கவனத்தில் கொண்டு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்கவும் திருத்த வேலை செய்ய இருப்பவர்களுக்கும் திருத்த வேலை செய்தவர்களுக்கும் சேதத்துக்கான பகுதி கொடுப்பனவு கிடைப்பதற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விசேட அனுமதியின் கீழ் கிடைப்பதற்கு எங்கெங்கு தொடர்புகொள்ள முடியுமோ அங்கெல்லாம் தொடர்பு கொண்டு இக்குறை தீர்க்கப்படவேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சார்பாக கௌரவ முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ரவிகரனால் முன்மொழியப்பட்ட மேற்படி பிரேரணையை வடமாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகன் வழிமொழிய, சில சில திருத்தங்களுடன் சபையில் அப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment