July 17, 2016

அழிக்கப்பட வேண்டிய இனவாதம் புதிதாய் தோன்றியுள்ளது!

உடனடியாக அழிக்கப்பட வேண்டிய இனவாதம் ஒன்று புதிதாக தோன்றி உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.


கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.

குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற சம்பவம் மீண்டும் ஓர் இரத்தக்கறை தோற்றுவிக்காத வண்ணம் தடுக்கப்பட வேண்டிய விடயம் எனவும் அநுரகுமார சுட்டிக்காட்டினார்.

அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து இதை தடுக்காவிட்டால், இதுவரையும் தோன்றிடாத மிக பயங்கரமான இனவாதமாக இது மாறும் எனவும் அதற்கு முன்னர் இதனை தடுக்க வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சுயாதீன கல்வி உரிமையை மாணவரிடம் இருந்து பறித்து, அரசாங்கம் பணம் படைத்தவரிடம் கல்வியை விற்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும் “நரியிடம் கோழியை கொடுப்பது போல” மாலபே விடயம் சுகாதார அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்த காலத்தில் மாணவர்கள் எவ்வாறு வதைக்கப்பட்டு உரிமைகள் முடக்கப்பட்டதோ, அது போலவே நல்லாட்சி அரசிலும் மாணவர்கள் கைது செய்யப்படுவதும்பா, வகுப்புத் தடைகள் விதிக்கப்படுவதும் தொடர்வதாக கூறினார்.

போராட்டத்தை மேற்கொண்டு வீதியில் இருக்கும் மாணவர்களின் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பசிலுக்கு தேசியம் பற்றி பேச என்ன அதிகாரம் உண்டு?

61 இராணுவ சிப்பாய்களை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தி உள்ள பசிலுக்கு தேசியம் பற்றி பேசுவதற்கு என்ன அதிகாரம் உண்டு என அவர் கேள்வி எழுப்பினார்.

இராணுவத்தினரை மையப்படுத்தி கருத்து வெளியிட்டு அரசியல் நடத்துவது பசிலின் எதிர்காலம் சாதகமற்றது எனவும் சுட்டிகாட்டினார்.

மேலும், கிரிஸ் நிறுவனமானது இலங்கையில் கொள்வனவு செய்த பெருமதி மிக்க நிலத்துக்கான தொகையையே நாமலின் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவும் மக்கள் சார்பில் பார்க்கும் போது குற்றம் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சுட்டிகாட்டினார்.

No comments:

Post a Comment