August 18, 2016

நடுவானில் பிறந்த அதிர்ஷ்டக்கார குழந்தை!

துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நடுவானில் குழந்தை பிறந்துள்ளது.


குறித்த நிகழ்வை சக பயணியான Missy Berberabe Umandal என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்து பதிவிட்டுள்ளார். அதில் பிறந்த குழந்தை தாயுடன் இருக்கும் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

தனது பதிவில் கூறியிருப்பதாவது, குறித்த கர்ப்பிணி பெண்ணிற்கு அக்டோபர் மாதம்தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் சொல்லியிருந்ததால், அவர் துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

துபாயிலிருந்து மணிலா ( பிலிப்பைன்ஸ் தலைநகர்) 9 மணி நேர பயண தூரம். மணிலாவை நெருங்க 5 மணி நேரம் இருக்கும்போது பிரசவ வலியால் துடித்திருக்கிறார்.

அப்போது விமானம் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. விமான பணிப்பெண்கள் செய்வதறியாது திகைத்து நின்றபோது , அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் இருந்த இரண்டு செவிலியர்கள் உதவிக்கு வந்திருக்கிறார்கள்.

அவசர சிகிச்சை காரணமாக விமானத்தை இந்தியாவில் தரையிறக்க அனுமதி கேட்டனர் விமானிகள்.

ஐதராபாத் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்ய அனுமதியும் உடனே கிடைத்துள்ளது. அப்போது விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோதே அப்பெண்ணுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

அதே விமானத்தில் இரண்டு பேர் கைக்குழந்தைகளோடு பயணித்திருக்கின்றனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த புதிய துணிகளை புதிதாக பிறந்த குழந்தைக்கு கொடுத்து உதவியுள்ளனர்.

பிறந்த குழந்தை நலமுடன் இருந்தபோதிலும் குறை பிரசவம் என்பதால் விமானத்தை தரையிறக்கி மருத்துவ பரிசோதனை செய்வதே நல்லது என்ற முடிவுடன் விமானம் இந்தியாவில் தரையிறங்கியிருக்கிறது.

மருத்துவர்களின் சோதனையில் தாயும் சேயும் நலமாக இருப்பதால் தொடர்ந்து பயணிக்கலாம் என சொன்ன பிறகு 9 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் பிலிப்பைன்சிற்கு கிளம்பியிருக்கிறது.

இந்நிலையில் அந்த குழந்தை வாழ்நாள் முழுக்க இலவசமாக பயணிக்க Cebu Pacific Airlines நிறுவனம் சலுகை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment