July 12, 2016

பசிலின் விமானப் பயணக் கட்டண நிலுவையை செலுத்திய மர்ம நபர்!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் விமானப் பயணங்களுக்கான நிலுவைப் பணத்தை மர்ம நபர் ஒருவர் செலுத்தியுள்ளார்.
பசில் அமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொண்ட உள்ளக பயணங்களுக்கான கட்டண நிலுவையை சிறிபால அமரசிங்க என்ற மர்ம நபர் செலுத்தியுள்ளார் என பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சுமார் 3.4 மில்லியன் ரூபா நிலுவைப் பணம் இவ்வாறு இலங்கை விமானப்படைக்கு செலுத்தப்பட்டுள்ளது.

 
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பசில், உலங்கு வானூர்தி மூலம் மேற்கொண்ட பயணங்களுக்கான கட்டண நிலுவை இவ்வாறு வேறு நபரினால் செலுத்தப்பட்டுள்ளது. கட்டண நிலுவை செலுத்தப்படாமை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி, இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது. பாரிய தொகை நிலுவையை ஒரே தடவையில் செலுத்திய நபரின் தேசிய அடையாள அட்டைப் பிரதி உள்ளிட்ட விபரங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட உள்ளக விமானப் பயணங்களுக்காக 150.4 மில்லியன் ரூபா கட்டணமாக விமானப்படைக்கு செலுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அப்பாவி மக்களின் பணமே இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வறிய மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கமநெகும திட்டத்தின் மூலதனப் பணமே இவ்வாறு விமானக் கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.இந்த விபரங்களை அரச தரப்பு சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக பண்டார, ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த அனைத்து தகவல்களும் விபரங்களும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் பசிலின் சார்பில் பணம் செலுத்தியவருக்கும் பசிலுக்கும் இடையிலான தொடர்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment