June 30, 2016

சுவாதியால் மரணமான முதியவர்..!

சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு முதியவர் நெஞ்சு வலியால் மரணம் அடைந்துள்ளார். இதற்கு ரெயில்வே போலீசார் முதலுதவி செய்யாததுதான் காரணம் என அவரது மகன் குற்றச்சாட்டியுள்ளார்.


சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் வைத்து மர்மநபர் ஒருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மூடப்படாமல், பல மணி நேரமாக அங்கேயே போடப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற பயணிகள் பயத்துடனேயே சுவாதியின் உடலை பார்த்து சென்றனர்.

அப்போது, சூளைமேட்டைச் சேர்ந்த ஆதிகேசவன் (70) என்பவர் அங்கு வந்திருக்கிறார். வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஸ்டீல் பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்த ஆதிகேசவன், தினமும் காலை 8.30 மணியளவில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்வாராம்.

இந்நிலையில், சுவாதி கொலையான அன்றும் வழக்கம் போல் வந்த ஆதிகேசவனுக்கு, சுவாதியின் உடலை பார்த்ததும் அதிர்ச்சியில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அவர் வலியால் துடித்தவாறு அருகில் இருந்து சுவரில் சாய்ந்திருக்கிறார்.

அப்போது, அங்கு இருந்த போலீசாரோ, ரெயில்வே போலீசாரோ ஆதிகேசவனுக்கு எந்த முதலுதவியும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், போலீசார், ஆதிகேசவனின் மகனுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து, அங்கு வந்த ஆதிகேசவனின் மகன் கோதண்டராமன், தனது தந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே, இறந்து விட்டதாக கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில், தனது தந்தையின் இறப்புக்கு ரெயில்வே போலீசாரே காரணம் என கோதண்டராமன் குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”சுவாதியின் உடலை பார்த்த அதிர்ச்சியில் எனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்கிருந்த ரெயில்வே போலீசார் முதலுதவி செய்திருந்தால் எனது தந்தை பிழைத்திருக்க வாய்ப்புண்டு. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இந்த ரெயில் நிலையத்தில் முதலுதவி செய்யும் விதத்தில் கூட எந்தவித மருத்துவ வசதியுதம் செய்யவில்லை. இதனை ரெயில்வே துறை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment