May 17, 2016

‘வெள்ளை வானுடன் கோட்டாவுக்கு தொடர்பு’!

‘ராஜபக்ஷக்களின் தேவையின் பிரகாரமே, அன்று எல்லாமே அரங்கேறின. அவர்களின் பல்வேறான தேவைகளுக்காக, நான் ஆஜராகினேன்’ என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர்
மேர்வின் சில்வா, ‘வெள்ளை வான் கடத்தல்களுடன், பாதுகாப்பு அமைச்சின்  முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தொடர்பு உண்டு என்றும் தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை (கூட்டு எதிர்ப்பை) கள்வர்கள், கொள்ளையர்கள்; பயன்படுத்துவதற்கு இடமளிக்கமுடியாது. இந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தானே என்றும் அவர் கூறினார்.
கொழும்பு, ஆவணமாக்கல் கேட்போர் கூடத்தில், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘என்னுடைய மகனைக் கடத்திக் கொல்வதற்கு முயன்றனர். ஜனாதிபதி செயலகத்திலிருந்தே, அதற்கு டிபென்டர் வாகனம் அனுப்பப்பட்டது. எனினும், மகனுக்கும் நான் ஏதாவது கற்றுக்கொடுத்திருந்தமையால், தப்பித்துக்கொண்டார். அவ்விடத்திலிருந்த சி.சி.டி.வியின் கமெராக்களின் காட்சிகள் யாவும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.
இவை யாவும், கோட்டாவின் உத்தரவின் பிரகாரமே முன்னெடுக்கப்பட்டன’ என்றும் அவர் கூறினார். ‘ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியின் செயற்பாட்டை முன்னெடுக்கும். எம்முடன் இன்னும் பலர் இணைவர். வெற்றிலைச் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு, அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற நிலையில், அதில் இன்னுமொரு பிரிவினர், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக இருக்கமுடியாது’ என்றும் அவர் கூறினார்.  ‘ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்றால், அது எனது தலைமையில் உருவாக்கப்பட்ட „கூட்டு எதிர்ப்பு… அமைப்பே ஆகும்.
‘மக்களின் நலன் கருதி „கூட்டு எதிர்ப்பு… என்ற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளோம். இது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டது. அதாவது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதொரு கட்சியாகும். தற்போதுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை, குடல்வால் என்றே அழைக்க வேண்டும்.
அதாவது,  சமிபாட்டுத்தொகுதியினுள் தேவையில்லாம் வளரும் சதையை, குடல்வால் எனக் கூறுவதைப்போன்று, அரசியலுக்குத் தேவையில்லாத ஒரு கட்சியை, குடல்வால் என்றே அழைக்கவேண்டும்’ என்றார். ‘நல்லாட்சிக்கு வித்திடுவதற்கு உதவியளித்த ஐக்கிய தேசியக் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எத்தருணத்திலும் புறக்கணித்துவிட்டு செயற்பட்டுவிடக்கூடாது. அதேபோல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும் கைவிட்டுவிடாது, ஒன்றிணைத்து செயற்பட வேண்டும்.
ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், ஊடக நிறுவனங்களுடன் முரண்பட்டமை உள்ளிட்ட, அனைத்துத் தவறுகளும் என்னால் இடம்பெற்றமைக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழுத்தமே காரணமாகும்’ என்றார். ‘ஆரம்பக் காலம் தொட்டு, மஹிந்தவின் நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில், மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சில விடயங்கள் எனக்குத் தெரியும்.
அவரது ஆட்சி எவ்வாறு கொண்டு செல்லப்பட்டது என்றும் எனக்கு தெரியும். மஹிந்த தலைமையிலான ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட சகல விடயங்களும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழேயே முன்னெடுக்கப்பட்டன. சகோதரர்களின் வழிகாட்டலிலான செயற்பாடுகளுக்கும் அவர்களது சுகபோக வாழ்க்கைக்குமே மஹிந்த முன்னுரிமை வழங்கினார்.
கோட்டாபய, ஹிட்லர் என்றால், பசிலும் அதேபோன்றதொரு கொடூரக்காரர்தான். அன்று பழிவாங்கலுக்கு ஆளாக்கப்பட்ட அரசியல்வாதிகளில் நானும் ஒருவன். எனது குடும்பமே பழிவாங்கப்பட்டது. மஹிந்தவுக்காக, அவரின் அழுத்தம் காரணமாக, ஊடக நிறுவனத்துடன் நேரடியாகச் சென்று சண்டையிட்டேன். பதிலுக்கு அவர், எனது மகனைக் கொல்லத்திட்டமிட்டார்’ என்றார்.

No comments:

Post a Comment