May 5, 2015

மாவீரர் தினத்தில் சுடரேற்றினாராம்: ரவிகரன் மீது இன்று விசாரணை!

மாவீரர் தினத்தில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சுடரேற்றியமைக்காக காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்திருக்கின்றனர். நேற்று திங்களன்று மாலை முல்லைத்தீவு காவல்துறையினரிடமிருந்து வந்த
அழைப்பொன்றையடுத்து. இன்று செவ்வாய்க்கிழமை காலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தன்னிடம் விசாரணை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களாகிய மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் விளக்கேற்றினீர்களா என கேட்டதாகவும், அதற்கு தான் மட்டுமல்ல வடக்கில் பல இடங்களிலும் மக்கள் தமது உறவினர்களான இறந்தவர்களை – அவர்கள் சிவிலியன்கள் மற்றும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களையும் –நினைவுகூர்ந்து தமது மத கலை, கலாசாரத்தின் அடிப்படையில் நினைவு கூர்ந்து விளக்கேற்றியதுடன், அவர்களுக்கு தமது மரபின்படி உணவு சமைத்துப் படைத்து வணங்கியதாகவும் ரவிகரன் தெரிவித்தார்.
அவ்வாறு தன்னை செய்யுமாறு எவரேனும் கேட்டிருந்தார்களா, அல்லது வற்புறுத்தியிருந்தார்களா, வேறு ஆட்களை அழைத்து அவ்வாறு செய்தீர்களா என வினவியதாகவும், தன்னை எவரும் கேட்கவோ வற்புறுத்தவோ இல்லையென்றும் தான் வெளியார் எவரையும் அழைக்கவில்லை என்றும் தனது விருப்பத்திற்கு தமது மரபுக்கு அமைவாக அவ்வாறு செய்ததாகக் காவல்துறையினரிடம் தெரிவித்தாகவும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கூறினார்.
யுத்த மோதல்களில் உயிரிழந்த தமது உறுப்பினர்களை வருடந்தோறும் நினைகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக நவம்பர் மாதம் 27 ஆம் திகதியை விடுதலைப்புலிகள் மாவீரர் தினமாக அனுட்டித்து வந்துள்ளார்கள்.
விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கென தனியாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் அன்றைய தினம் குடும்பத்தினர், உற்றவர், உறவினர்கள் நண்பர்கள் சகிதம் கூடி தீபங்கள் ஏற்றி அவர்களை நினைந்து அஞ்சலி செலுத்தி வந்துள்ளனர்.
யுத்தம் முடிவடைந்ததையடுத்து, விடுதலைப்புலிகளின் இத்தகைய மாவீரர் துயிலும் இல்லங்களை இல்லாமல் செய்த அரச படைகள், அன்றைய தினத்தில் உயிரிழந்த விடுதலைப்புலிகளை நினைவுகூர்வதையோ, அவர்களுக்காக தீபம் ஏற்றுவதையோ செய்யக் கூடாது என முன்னைய அரசாங்கத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே கடந்த வருடம் மாவீரர் தினத்தன்று தீபம் ஏற்றினார் என்று தமிழ் மற்றும் சிங்கள பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படங்கள் மற்றும் செய்தி குறிப்புக்களை வைத்து காவல்துறையினர் தன்னிடம் விசாணைகளை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர் என்று வடமாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment