May 12, 2015

இராணுவத்தினரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளானேன்! பிரித்தானியாவில் கதறிய இலங்கை பெண்!

தாம் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சிகரட்டினால் சுடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் இலங்கையில் இருந்து தப்பிவந்து இங்கிலாந்தில் புகலிடம் கோரியுள்ள தமிழ் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டன் டெய்லி பிரஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் பிரித்தானியாவின் உள்துறை அலுலகம் தம்மை இலங்கைக்கு திருப்பியனுப்ப முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பெண் அண்மையில் இங்கிலாந்தின் கரையோர நகரான குரோமருக்கு வந்து தமது கணவருடன் இணைந்தார். இந்தநிலையில் அவர் புகலிடக்கோரிக்கையை விடுத்தபோதும் அது நிராகரிக்கப்பட்டு அவர் நாடு கடத்தப்படவுள்ளார்.
இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை பேர்மிங்கம்மில் உள்ள மக்கள் தீர்ப்பாயம் ஒன்று விசாரணை செய்து வருகிறது.
இதில் சாட்சியமளித்த பெண்ணின் கணவர் தாம் இராணுவத்தினரிடம் இருந்து 1998 ஆம் ஆண்டு தப்பிவந்தபோது அவர்களால் தம்மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தீர்ப்பாயத்தில் சாட்சியமளித்த உள்துறை அலுவலக அதிகாரி ஜோன் ஸ்மித் குறித்த பெண் தமது கணவர் தொடர்பில் வழங்கிய வங்கி விடயம் மற்றும் தொழில் என்பனவற்றை நம்பமுடியாமை காரணமாகவே அவரை திருப்பியனுப்ப முடிவெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
பெண்ணின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த பெண் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துக்கொள்ளவேண்டியேற்படும் என்று எச்சரித்தார். இதனையடுத்து மக்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதி தமது தீர்மானத்தை ஒரு தினத்தில் அறிவிப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment