June 17, 2014

கோண்டாவிலில் இளைஞர்கள் மீது தாக்குதல்! படையினரும் பொலிஸாரும் இணைந்து தாக்கினராம்!

கோண்டாவில் பகுதியினில் பொதுநூலகமொன்றினுள் படையினரும் பொலிஸாரும் இணைந்து அங்கு நின்றிருந்த இளைஞர்கள் மீது இன்று தாக்குதல்களை நடத்தியிருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.நேற்றைய தினம் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட தமது சகபாடியான இரவீந்திரன் சுகிந்தனிற்கு அஞ்சலி செலுத்த தயாராகிக்கொண்டிருந்த போதே அங்கு வந்திருந்த படையினரும் பொலிஸாரும் சகட்டு மேனிக்கு தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக இரு குழுக்களிடையே நடந்த மோதலை தடுக்க தவறிய இலங்கை பொலிஸார் தற்போது அப்பாவி இளைஞர்கள் மீது தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்றைய தினம் குறித்த இரு குழுக்களிற்குமிடையே மூண்டிருந்த மோதல் போக்கு பற்றி பொலிஸாரிற்கு தகவல் வழங்கப்பட்டிருந்த போதும் அவர்கள் கண்டுகொண்டிருக்கவில்லையென குடும்பத்தவர்கள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையினில் படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட பின்னரே அவசர அவசரமாக சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முற்படுவது போல பொலிஸார் சம்பவங்கள் எதனுடனும் தொடர்பற்ற இளைஞர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.இன்று தாக்குதல்; நடத்தப்பட்ட பொதுநூலகம் வளர்மதி சனசமூக நிலையமெனவும் தாக்கப்பட்டவர்கள் அப்பாவி இளைஞர்களெனவும் தனது ஆதரவாளர்களெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment