June 18, 2014

அனந்தியின் பாதுகாவலர் திருப்பி பெறப்பட்டார்! பாதுகாப்பு அமைச்சின் பணிப்பிலா?

தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனது காவல்துறை பாதுகாப்பு நேற்றிரவுடன் திடீரென விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரால் செய்யப்பட்ட முறைப்பாடுகளையடுத்து கடந்த மாதம் 16 ம் திகதி முதல் பெண் காவல்துறையை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சுமார் ஒரு மாத காலமேயான நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு நேற்றிரவோடிரவாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லையென தெரிவித்தே காவல்துறை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தன்னுடன் இணைந்ததாகக் காவல்துறை பாதுகாப்பினை பெற்றுக்கொண்ட சக மாகாணசபை உறுப்பினர்களான கஜதீபன் மற்றும் சுகிர்தன் ஆகிய இருவரதும் காவல்துறை பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படவில்லையென அனந்தி ஊடகவியலாளர்களிடையே பேசுகையில் தெரிவித்தார்.

தனக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்கின்ற நிலையில் பாதுகாப்பு விலக்கப்பட்டமைக்கும் அண்மையில் கட்சி அலுவலகத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து அரசியல் பணிகளில் முழு அளவில் குதித்திருக்கின்ற சூழலிற்கும் தொடர்புகள் இருக்கலாமென தான் சந்தேகிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் தனக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டமை தொடர்பில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் முதலமைச்சர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலிற்கு முன்னதான நாளில் அவரது வதிவிடம் தாக்குதலிற்குள்ளானதுடன் ஆதரவாளர்களும் தாக்கி படுகாயமடைய வைக்கப்பட்டிருந்தனர். அவ்வேளை அனந்தி மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாக பல தடவைகள் தொலைபேசி மிரட்டல்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்திருந்த நிலையிலேயே அவர் காவல்துறை பாதுகாப்பினை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment