July 7, 2016

இராணுவமய சூழலில் இருந்து 2018இல் சிறிலங்கா முற்றாக விடுபடும் – மங்கள சமரவீர!

2018ஆம் ஆண்டுக்குள், இராணுவமய சூழலில் இருந்து சிறிலங்கா முற்றாக விடுபட்டு விடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,

‘2018ஆம் ஆண்டுக்குள் இராணுவமய நீக்க செயல்முறைகள் நிறைவடைந்து விடும் என்று நம்புகிறோம். இது வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் கூட பொருத்தமானது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவ முகாம்களை அமைத்து, நாட்டை இராணுவமய சூழலுக்குள் கொண்டு வந்திருந்தது.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அந்த நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக, வடக்கு- கிழக்கில் இருந்த இராணுவ பின்னணி கொண்ட ஆளுனர்கள் மாற்றப்பட்டனர். இராணுவத்தினர் வசமிருந்த நிலங்களும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

எல்லா வர்த்தக நடவடிக்கைகளில் இருந்தும் 2018ஆம் ஆண்டுக்குள் விலகிக் கொள்ளுமாறு இராணுவத்திடம் கேட்டுள்ளோம்.

இராணுவம் ஏற்கனவே பல வர்த்தக செயற்பாடுகளைக் கைவிட்டுள்ளது.  2018ஆம் ஆண்டுக்குள் இந்தச் செயற்பாடுகள் முழுமையடையும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment