June 30, 2016

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு சொந்தமில்லாத ஆயுதங்கள்!

புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் காணப்படும் பொலிஸாருக்கு சொந்தமில்லா மேலதிக ஆயுதங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு உரிமையில்லாத ஆயுதத் தொகுதியொன்று பொலிஸ் நிலைய ஆயுதக் களஞ்சியத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புறக்கோட்டைப் பகுதிக்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மூன்று மாதங்களுக்கு முன்னதாக புறக்கோட்டை பொலிஸ் நிலைய ஆயுதக் களஞ்சியத்தை பரிசோதனையிட்ட போது, பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பில்லாத ஆயுதங்கள் சில களஞ்சியத்தில் காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கேள்வி எழுப்பிய போதிலும் அவர் அதற்கு உரிய பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சில அதிகாரிகளிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் ஜனாதிபதி காரியாலயத்துடன் தொடர்புடைய சாரதி ஒருவர் புறக்கோட்டை பொலிஸ் நிலைய உயரதிகாரியுடன் இணைந்து ஏதேனும் ஓர் இரகசிய வேலையை செய்துள்ளதாகவும்,

அதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களே இவ்வாறு பாதுகாப்பாக புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பொலிஸ் நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment