November 2, 2014

நிலம் இல்லாத மக்களுக்கு அபிவிருத்தி எதற்காக? பாராளுமன்றில் அரியம் எம்.பி கேள்வி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011, 2012 ஆம் ஆண்டுகளில் பட்டம் முடித்த 350க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இற்றைவரைக்கும் தொழில் வாய்ப்பின்றி வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
பாராளுமன்றில் வரவு- செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த நாட்டின் ஜனாதிபதி வேலையற்ற பட்டதாரிகள் 50000 பேருக்கு வேலை வழங்கியதாக பெருமிதமாக கூறுகின்றார். அதனை நாம் முழுதாக வரவேற்கின்றோம்.
ஆனால் இன்னும் வடகிழக்கு மாகாணத்தில் பல பட்டதாரிகள் இன்னும் வேலையற்று இருக்கின்றார்கள் என்பதனையும் ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டுகளில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளில் 120 பேர் விடுபட்டிருக்கின்றார்கள்.
பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தொழிற்சங்க போராட்டத்தால் இவர்களது பரீட்சை பெறுபேறுகள் தாமதமாக வெளியிடப்பட்டமையே இதற்கான காரணம்.
பொது நிருவாக அமைச்சுக்கு வேலையற்ற பட்டதாரிகளினால் 12 தடவைகளுக்கு மேல் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டும் இதுவரையும் எந்த விமான நடவடிக்கைகளும் அமைச்சினால் எடுக்கப்படவில்லை.
மாறாக நேர்முக பரீட்சைக்கான கடிதங்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் 2014.4.29 ஆம் திகதி அனுப்பப்பட்டு, நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அங்கு சென்றவேளை அங்குள்ள விளம்பரப் பலகையில் நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மனமுடைந்த பட்டதாரி மாணவர்கள் மன உளச்சலுக்கும் ஆளாக்கப்பட்டு ஏமாற்றமும் அடைந்தார்கள்.
இதேபோன்று இந்த மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டு 2012.3.30 ஆம் திகதிக்குள் பட்டம் முடித்த பட்டதாரிகளுக்கும் இதுவரைக்கும் இன்னும் வேலை வழங்கப்படவில்லை.
ஆனால் அதே ஆண்டிற்குள் பட்டம் முடித்தவர்கள் இன்று வேலை செய்து கொண்டிருக்க 350 பேருக்கும் அதிகமானோர் வேலையற்று விரக்தியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதன்காரணமாக 2 பேர் தற்கொலைக்கு முயற்சித்து இறுதியில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய வரலாறுகளும் உண்டு.
இவர்களினது வயது அதிகரித்துச் செல்வதன் காரணமாக எதிர்காலத்தில் எமது வாழ்க்கை எவ்வாறு அமையும் என்ற வினாவுடன் பட்டதாரிகள் இன்று மனக்கவலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கினறார்கள்.
இந்த நாட்டிலே பொருளாதார அபிவிருத்தி என்று மார்பு தட்டும் அரசாங்கம், மட்டக்களப்பு மாவட்டத்தில் படந்த 7 வருடங்களுக்குள் 70883 பில்லியன் நிதி அபிவிருத்திக்கென்று செலவிடப்பட்டதாக கூறுகின்றது.
ஆனால் 7 வருடங்களுக்குள் மட்டக்களப்பு மாட்டத்தில் மாத்திரம் 33600 மில்லியன் ரூபா மதுபானத்திற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதிக்குப்பின் இருந்து இற்றைவரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மொத்தக் காணியில் இருந்து 145885 ஏக்கர் நிலம் அரசாங்கத்தினால் சூறையாடப்பட்டிருக்கின்றது.
இது எவ்வாறெனில் சிங்களக் குடியேற்றத்திற்கு 5030 ஏக்கர் காணியும், அத்துமீறிய பயிர்ச்செய்கைக்கு 8576 ஏக்கரும், புதிய விகாரை அமைப்பதற்கு 84 ஏக்கரும், கரும்புச் செய்கைக்கு 9920 ஏக்கரும், அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் படி நன்கு திட்டமிட்ட முறையில் சுசில் பிறேமச்சந்திர அவர்களினால் 122263 ஏக்கர் புதிதாக 54 இராணுவ முகாங்கள் அமைப்பதற்கென 650 ஏக்கர் காணியும் மட்டக்களப்பில் இருந்து அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டிருக்கின்றது.
இதுதான் இவர்கள் கூறும் அபிவிருத்தியா? நிலம் இல்லாத மக்களுக்கு அபிவிருத்தி எதற்காக? நில ஆக்கிரமிப்பினை தடுத்து நிறுத்த அரசாங்கம் எதிர்காலத்தில் என்ன வகையான நடவடிக்கைகளை எடுக்கப் கோகின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment