May 21, 2015

ஈழத்தை வழிநடத்தும் மாணவர் சமூகம்-புகழேந்தி தங்கராஜ்!

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே……


என்கிற திருப்பாவையின் கம்பீரத் தமிழுக்கு, சென்ற 18ம் தேதி அடையாளமாகியிருக்கிறது தமிழரின் தாய்மண்ணான எம் தமிழீழ மண். இலங்கை நீதிமன்றங்களின் தடை கிடையையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு, வீதிக்கு வந்திருக்கிறது எம் தாய்மண்.

ஐந்துபேருக்கு ஒரு சிப்பாய் என்பதுதான் இன்றைக்கு வன்னி மண்ணின் கலவர நிலவரம். உலகின் எந்த நாட்டிலும், எந்தப் பகுதியிலும் இப்படியொரு ராணுவக் குவிப்பு இல்லை. தமிழீழத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஐநூறு பேர் வசிக்கிறார்கள் என்று வையுங்கள்….. அங்கே நூறு சிங்களச் சிப்பாய் நின்று கொண்டிருக்கிறான். இந்த அளவுக்கதிகமான ராணுவக் குவிப்பு அச்சத்திலும் பதற்றத்திலும்தான் வைத்திருக்கிறது அங்குள்ள நமது உறவுகளை! அதையெல்லாம் மீறித்தான், இனப்படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவைப் போற்றத் திரண்டார்கள் அவர்கள். ஈழ மக்களின் இந்த மன உறுதி கண்டு வியக்கிறது உலகம்.
பீனிக்ஸ் பறவைகள் போன்று சாம்பலிலிருந்து மீண்டு எழுகிற ஈழத் தமிழினத்தின் இந்த எழுச்சி, சர்வதேசத்தை வியக்க வைத்திருக்கிறதெனில், இலங்கையை வியர்க்க வைத்துள்ளது. மைத்திரிபாலா நாட்டை நாசம் செய்துவிட்டார் – என்று இப்போதே குரல் எழுகிறது சிங்கள வெறியர்களின் தென்னிலங்கையில் இருந்து!
வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட உறவுகளின் நினைவைப் போற்ற, மே 18ம்தேதி பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஈழத்தில்! அவற்றை நேரடியாகத் தடுக்க முடியாத நிலையில், குறுக்கு வழிகளைக் கையாண்டது இலங்கை அரசு. நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்த நீதிமன்றம் அனுமதிக்கவில்லை – என்று நூல்விட்டுப் பார்த்தது. நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தவர்களின் வீடுகளில் கொண்டுபோய் நீதிமன்ற ஆணையை வழங்கிக்கொண்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவுடன் நில்லாது, தடை உத்தரவு, தீவிர வாகனத் தணிக்கை, ஆயுதப் படையினர் குவிப்பு – என்று என்னென்னவோ செய்து பார்த்தார்கள். அவர்களது இந்த முயற்சி துளிக்கூட பலிக்கவில்லை. அரசின் அச்சுறுத்தல்கள் குறித்து கவலையேபடாமல், 2009 இனப்படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான நினைவேந்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவித்தது தமிழர் தரப்பு.dcp2786676767763
முன்னதாகவே அறிவித்தபடி, வாகரை, மன்னார், புதுக்குடியிருப்பு, மருதங்கேணி, கீரிமலை, வடமராட்சி, கிளிநொச்சி, திருகோணமலை, வவுனியா – என்று ஈழத் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. முரசுமோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை – தமிழ் மக்களின் ரத்தத்தால் சிவந்த எல்லாப் பகுதிகளிலும் நினைவேந்தல் நடந்திருப்பது, அந்த மண்ணின் கொதிநிலை என்ன என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, எமது புலம்பெயர் உறவுகள், மே 18ம் நாளை இனப்படுகொலையை நினைவுகூரும் தினமாகக் கடைப்பிடித்து வந்தனர். உலகின் வீதியெங்கும் கூடி, நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டனர். இந்த ஐந்து ஆண்டுகளில் உலகத் தமிழரின் முழக்கத்தைத் தாய்மண்ணில் எதிரொலிப்பதில் முன் நின்றவர்கள் – யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள். அரசின் அடக்குமுறைகளையெல்லாம் மீறித்தான் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் அவர்கள். இப்போது, அந்த மாணவக் கண்மணிகளுடன் இணைந்து கொண்டிருக்கிறது ஒட்டுமொத்த ஈழமும்!
வழக்கம் போலவே இந்த ஆண்டும், யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கமும் மாணவர் சங்கமும் நடத்திய நினைவேந்தல் நிகழ்வுதான் முதல் நிகழ்வாய் அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் மெழுகுவர்த்திகளைக் கையில் ஏந்தி நிற்கிற காட்சியைப் பார்க்கிற எவரும், இளைய தலைமுறையினரின் உணர்வையும் உறுதியையும் உணர முடியும்.
தங்களது துயரையும் குமுறலையும் ஏக்கத்தையும் கட்டுப்படுத்திக்கொண்டு சுடரேந்தி நிற்கும் மாணவச் செல்வங்கள்தான் வழிநடத்துகிறார்கள் ஈழத்தின் அரசியலை! அவர்கள் வழியில்தான் நடக்க வேண்டியிருக்கிறது அத்தனை அரசியல் கட்சிகளும்! (தமிழக மாணவர்கள் என்ன ஆனார்கள், எங்கே போனார்கள், அரசியல் கட்சிகளில் ஐக்கியமாகிவிட்டார்களா? விவரமறிந்தவர்கள் தகவல் தரலாம்!)
இந்த இடத்தில் என் இனிய பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவித்தாக வேண்டும். மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள், ஈழத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையின் செய்தியாளர்கள். அந்தத் தாக்குதல்களில் உயிரிழந்திருக்கிறார்கள், ஊனமடைந்திருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் கவலையேபடாமல், மே 18 நினைவேந்தலை தன் அலுவலத்திலேயே நடத்துகிறது ‘உதயன்.’ இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
இனப்படுகொலை – என்று தீர்மானம் போட்ட அரசுதானே ஆட்சியில் இருக்கிறது இங்கே……. இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு இங்கிருக்கிற பத்திரிகையாளர்கள் சார்பில் ஒரு நினைவேந்தல் கூட நடத்தப்படவில்லையே……. ஏன்? என்ன ஆச்சி உங்களுக்கு!
“நடந்தது இனப்படுகொலைதான்” என்கிற தீர்மானத்தின் மூலம் சர்வதேசத்தின் பிடரியில் அடித்த வடமாகாண சபை முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன், மே 18ம் தேதி நினைவேந்தல் நிகழ்வுகளில் தனது அமைச்சர்களுடன் கலந்துகொண்டிருக்கிறார். இனப்படுகொலை என்றெல்லாம் தீர்மானம் போடலாமா – என்று கேட்ட தலைவர்களும் அவருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பது, விக்னேஸ்வரனின் ஆளுமையை உறுதி செய்வதாக இருக்கிறது. (சம்பந்தன்கள் சுமந்திரன்களை மட்டும் தான் காணோம்! வீட்டுக்குள்ளேயே விளக்கேற்றுகிறார்களா?)
உயிரிழந்தவர்கள் நினைவாக கோயிலில் போய் பிரார்த்தனை செய்யும் விக்னேஸ்வரன், கோயில் குளத்தில் தர்ப்பணம் செய்யும் விக்னேஸ்வரன் – என்று நிறைய புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன இணையதளங்களில்! என்றாலும், முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று எம் இனத்தின் ஏக்கத்தை எடுத்துரைக்கும் விக்னேஸ்வரன் புகைப்படம்தான் நம்பர் ஒன். அரைக்கைச் சட்டையும் வேட்டியும் அப்படிப் பொருந்துகின்றன முதல்வருக்கு!
(தமிழக வேட்டி தயாரிப்பு நிறுவங்கள் விக்னேஸ்வரனை எப்படி விட்டுவைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வேட்டி விளம்பரத்துக்காக ராஜ்கிரணுக்கு 2 கோடி ரூபாய்வரை கொடுக்க அவர்கள் தயாராக இருந்ததாக ஒரு தகவல். விக்னேஸ்வரனின் கம்பீரத்துக்கு 200 கோடி கொடுக்கலாம் அவர்கள்!)
வேட்டியிலும் அரைக்கைச் சட்டையிலும் இருக்கிற கம்பீரம், விக்னேஸ்வரனின் வார்த்தைகளிலும் இருக்கிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் அவர் நிகழ்த்திய உரை, சர்வதேசத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்புகிற உரை.
“மனித உரிமைகள் மறக்கப்பட்டு, ஊடக உள் நுழைவு மறுக்கப்பட்டு, சாட்சியமே இல்லாமல் நடத்தப்பட்ட சமர்தான் முள்ளிவாய்க்கால்……..
ஆறு ஆண்டுகள் ஆகியும், கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பான உண்மை நிலவரம் இன்னும் வெளிக்கொணரப்படவில்லை……..
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் ஜெனிவாவில் நடக்கும்போதெல்லாம், கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்கிற நம்பிக்கை வலுவடைகிறது. ஆனால் வெறுமனே ஒரு கால நீட்சியோடு அது முடிவடைந்துவிடுகிறது…..
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எமது நோக்கமல்ல! தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சர்வதேசத்துக்கு உணர்த்தியாக வேண்டும் என்பதுதான் எமது நோக்கம்……”
விக்னேஸ்வரனின் முள்ளிவாய்க்கால் உரை, அவர் கொண்டுவந்த ‘இனப்படுகொலை’ தீர்மானம் போலவே அதி முக்கியத்துவம் வாய்ந்ததென்று நினைக்கிறேன் நான்.
2009 இனப்படுகொலை எதிர்பாராமல் நடந்த விபத்து அல்ல.
அது, நன்கு திட்டமிடப்பட்டது.
முன்கூட்டியே முடிவுசெய்யப்பட்டது.
நடப்பது என்னவென்பதே வெளியே தெரியாதபடி மறைக்கப்பட்டது.
சர்வதேச ஊடகங்கள் விரட்டப்பட்டன….

இதைத்தான், சாட்சியமே இல்லாமல் நடந்த சமர் – என்று அம்பலப்படுத்துகிறார் விக்னேஸ்வரன்.
‘ஒரு இனமே அழிந்துபோனாலும் பரவாயில்லை… இன்னொரு முறை உரிமை கிரிமையென்று பேசினால் என்ன நடக்குமென்று தமிழர் தரப்புக்குக் கடுமையாகப் பாடம் கற்பித்தாக வேண்டும்’ என்பதுதான் மகிந்த மற்றும் கோதபாய மிருகங்களின் முடிவு.
அதைத்தான் செயற்படுத்தியது சரத் பொன்சேகாவின் ராணுவம்.
அதற்குத்தான் அனுமதியளித்தது, மைத்திரிபாலாவின் அமைச்சகம்.
அதைத்தான் வேடிக்கை பார்த்தார்கள் சந்திரிகாவும் ரணிலும்!
அதற்குத்தான் அள்ளிக்கொடுத்தது, சொக்கத்தங்கம் சோனியா அரசு.
அது முடியும் வரை குப்புறப்படுத்துக் கொண்டது கோபாலபுரம்.
அது முடியும்வரை கண்களை மூடிக்கொண்டது சர்வதேசம்.

என்ன நடக்கப் போகிறதென்பது, துல்லியமாகத் தெரிந்திருந்தது இவர்கள் அத்தனைப் பேருக்கும்! ஆனால், எதுவுமே நடக்கப் போவதில்லை என்பதைப் போல அறிதுயிலில் இருந்தார்கள். இவர்களது செவுளில் அறைந்து எழுப்புவதற்காகவாவது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தாகவேண்டும். ‘அதுதான் எங்கள் நோக்கம்’ – என்று விக்னேஸ்வரன் சொல்வதற்கு ஆழமான பொருள் இருப்பது புரிகிறதா உங்களுக்கு!
மே 18 அன்று, நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பில் உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள செய்தியும், குறிப்பிடத்தக்கதுதான்! திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கையைக் காப்பாற்றுவதிலேயே குறியாயிருக்கும் சர்வதேசத்தின் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கிறது அது. ‘குற்றவாளி இலங்கைக்குத் துணைபோகும் நீங்கள் எப்படி நடுநிலையாளர்கள்’ என்கிற அவரது கேள்வி அழுத்தமானது.
‘எம்மால் முடிந்தவற்றையெல்லாம் செய்துபார்த்தோம். இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் யுத்தத்தின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முனைந்து நிற்கும் நிலையில் எம்மால் என்ன செய்துவிட முடியும்’ என்பது 2009லிருந்து சர்வதேசம் முன்வைக்கிற நயவஞ்சக வாதம்.
சர்வதேசத்தின் இந்த நயவஞ்சகத்தை நார்நாராகக் கிழித்திருக்கிறார் உருத்திரகுமாரன். “அனைத்துலக சமூகத்திலிருந்து வெளியாகிற இந்தக் கருத்து நேர்மையற்றது. இப்படியெல்லாம் கருத்துக் கூறும் தகுதி, ஒரு போரில் நடுநிலைமை வகிப்பவர்களுக்கு மட்டுமே இருக்க முடியும். இலங்கை அரசுக்கு தெள்ளத்தெளிவாக ஆதரவு வழங்கிய சர்வதேசத்துக்கு இப்படியொரு தகுதி எப்படி இருக்க முடியும்? அவர்களது ஆதரவுதான் முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குத் தூண்டுதலாக இருந்தது. நியாயமாகப் பார்த்தால், நடந்த இனப்படுகொலைக்கு அவர்களும் பொறுப்பேற்க வேண்டும்” என்கிற அவரது குற்றச்சாட்டு வலுவானது.
இனப்படுகொலைக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாகிவிட்ட சர்வதேச சமூகம், செய்த குற்றத்துக்குப் பரிகாரமாக, பொதுவாக்கெடுப்பு மூலம் தமிழீழத் தாயக உரிமையை தமிழினம் பெற வழிவகுக்க வேண்டும் – என்பது உருத்திரகுமாரனின் கோரிக்கை. இப்படியெல்லாம் கோரிக்கை வைப்பதைவிட, இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதுதான் முக்கியமென்று நினைக்கிறேன் நான்.
இனப்படுகொலை முடிந்தது முள்ளிவாய்க்காலில் என்றால், தொடங்கியது வாகரையில்! வாகரை மண்ணில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன் செல்வராஜா தலைமையில் நடந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் – உப்பு சப்பற்ற கஞ்சி விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இடப்பெயர்வின்போது எம் மக்கள் எதை உட்கொண்டார்கள் என்பதை நினைவூட்டுகிற இந்த ஏற்பாடு, உலகெங்கும் பரவ வேண்டும். ஒவ்வோராண்டு மே 18 அன்று, எந்தச் சுவையுமற்ற அந்தக் கஞ்சியைக் குடிப்பதன்மூலம், அநியாயமாகக் கொல்லப்பட்ட உறவுகளை நாம் நினைவுகூரவேண்டும். அதன்மூலமாவது, நடந்த இனப்படுகொலைக்கு உயிரைக் கொடுத்தேனும் நீதி பெற்றாக வேண்டும் என்கிற ஓர்மத்தை நமக்குள் விதைத்தாக வேண்டும்.
சொரணை இல்லாதவனைப் பார்த்து, ‘உப்புப் போட்டு சாப்பிடுறியா’ என்று கேட்பது வழக்கம். அதற்கு முரணாக, உப்புப் போடாமல் சாப்பிடுவதன் மூலமாவது சொரணை வருகிறதா என்று சோதித்துப் பார்க்கவேண்டும் முதலில்!

No comments:

Post a Comment